திராவிடக் கட்சிகள் தேவைப்பட்டால் பாஜகவுடன் கூட்டணி அமைப்பார்கள்-கார்த்தி சிதம்பரம்
சென்னை: திராவிடக் கட்சிகள் தேவைப்பட்டால் பாஜகவுடன் கூட்டணி அமைப்பார்கள். இதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும் தமிழக காங்கிரஸ் பிரமுகருமான கார்த்தி சிதம்பரம் கூறினார்.
சென்னையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர்,
உலகம் முழுவதும் இஸ்லாம் குறித்து தவறான எண்ணம் பரவியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் இந்த எண்ணம் அதிகமாக உள்ளது. இஸ்லாமியர்கள் குறித்த தவறான கருத்துகள் அகற்றப்பட வேண்டும்.
இங்குள்ள இஸ்லாமியத் தலைவர்கள் தங்களது நிலையைத் தெளிவாக எடுத்துக்கூற வேண்டும். அதற்கான மேடை கிடைக்க வேண்டுமானால் அவர்கள் காங்கிரஸ் போன்ற தேசிய கட்சியில் இணைய வேண்டும்.
முஸ்லிம்களுக்கென்று உள்ள கட்சிகளில் இருந்து செயல்பட்டால் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது. தேசிய கட்சியில் இணையும்போது மட்டுமே ஆட்சி அதிகாரமும் சாத்தியமாகும்.
பாஜகவுடன் கூட்டணி அமைக்காத ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே. திராவிடக் கட்சிகள் தேவைப்பட்டால் பாஜகவுடன் கூட்டணி அமைப்பார்கள். இதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
கல்விக்கடன் வழங்கும் ப.சிதம்பரம்:
இந் நிலையில் மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கடன் வழங்கும் நிகழ்ச்சி செங்கல்பட்டில் இன்று நடக்கிறது. இந்த கடன் உதவிகளை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வழங்குகிறார்.
இந்த கடனுதவி முகாமில் 36 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் பங்கேற்கின்றன.
செங்கல்பட்டு கே.ஆர்.சி. திடலில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் தா.மோ.அன்பரசன், தேசியமயமாக்கப்பட்ட 36 வங்கிகளின் மேலாளர்கள், இயக்குனர்கள் கலந்து கொள்கின்றனர்.