அண்ணா பல்கலை. துணைவேந்தரை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம்
சென்னை : நாமக்கல் மாணவி ஜோதி ராகிங் கொடுமையால் தற்கொலை செய்யவில்லை. குடும்பத்தில் பிரச்சினை இருந்ததாக தெரிகிறது, வகுப்புக்கு கட் அடித்துள்ளார், ஒரு மாணவருக்கு உன்னைப் பிடித்திருக்கிறது என எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார் என்று பேசிய சென்னை அண்ணா பல்கலைக்கழக து்ணைவேந்தர் மன்னர் ஜவகரை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆங்கிலம் சரியாக தெரியாததால் சக மாணவர்கள் கேலி செய்ததால் மாணவி ஜோதி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த மன்னர் ஜவகர், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 4 ஆண்டாக ராக்கிங் நடைபெறவில்லை. மாணவி ஜோதி ராக்கிங் கொடுமையால் தற்கொலை செய்யவில்லை. சம்பவத்திற்கு முன்பு அவர் வகுப்புக்கு கட் அடித்துள்ளார். குடும்பத்தில் பிரச்சினை இருந்ததாக தெரிகிறது. அவரது தாயார் அவருடன் சேர்ந்து வாழவில்லை என்று பேசியிருந்தார்.
மேலும் நேற்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தனது வகுப்பு மாணவர் ஒருவருக்கு ஜோதி, உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது என்று கூறி எஸ்.எம்.எஸ். அனுப்பியதாக கூறினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
அண்ணாபல்கலைக்கழக வளாகத்தில் ராக்கிங் எதுவும் கிடையாது என்பதை உறுதியாக கூறுகிறேன். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தனியாக பிளாக் உள்ளது. மற்ற ஆண்டு மாணவர்களுக்கு தனியாக பிளாக் உள்ளது. சீனியர் மாணவர்களின் விடுதி அறையில்
ஜுனியர் மாணவர்களை பார்த்தால் சீனியர் மாணவர் சஸ்பெண்டு என்று எச்சரிக்கை விடுத்துள்ளோம். ஜுனியர் மாணவர்களிடம் சீனியர் மாணவர்கள் பேசக்கூடாது என்று கூறியிருக்கிறோம். காரணம் அவர்களிடம் பழகுவதில் கோளாறு வரக்கூடாது என்பதற்காகத்தான் இந்த நடவடிக்கை.
25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் கண்காணிப்பாளர் போல நியமிக்கப்பட்டுள்ளார். அவரிடம் ராக்கிங் உள்பட எந்த புகார் அல்லது பிரச்சினைபற்றியும் தெரிவிக்கலாம். எனக்கு புகார் கடிதம் அனுப்பலாம். புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. விடுதிக்கும் அடிக்கடி சென்று விடுதி வார்டன் கண்காணித்து வருகிறார். எனவே ராக்கிங் நடக்க வாய்ப்பில்லை.
மாணவி ஜோதி தற்கொலை தொடர்பாக நாமக்கல் போலீசார் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவ-மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்கள். ஜோதி வகுப்பறையில் உட்கார்ந்து இருந்த வரிசையில் உள்ள மாணவ-மாணவிகள். முன் வரிசையில் மற்றும் பின் வரிசையில் உட்கார்ந்து இருந்த மாணவ-மாணவிகள் உள்பட 40 பேர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.
ஜோதியின் செல்போனை ஆய்வு செய்ததில் அவர் வகுப்பில் படிக்கும் மாணவர் ஒருவருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி உள்ளார். அதில் உன்னை எனக்கு பிடித்திருக்கிறது. உனது குணம் பிடித்து இருக்கிறது என்று அனுப்பி உள்ளார்.
இந்த எஸ்.எம்.எஸ்.க்கு பதில் அளித்து, அந்த மாணவர் நீ யார்? என்று எஸ்.எம்.எஸ். அனுப்பி உள்ளார். ராக்கிங் நடந்திருப்பது நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள். கல்லூரியில் இருந்து உடனடியாக நீக்கப்படுவார்கள் என்றார்.
இந்தப் பின்னணியில் மன்னர் ஜவஹரின் பேச்சைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் நேற்று முற்றுகை போராட்டம் நடந்தது. பல்கலைக்கழக பிரதான வாயிலை மாணவர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பின்னர் மாணவர் மன்ற செயலாளர் ராஜ்மோகன், மாநில நிர்வாகிகள் குமார், ஸ்டாலின், ஜான்சிராணி உள்பட 60 பேர் இதில் கலந்து கொண்டனர். பின்னர் துணைவேந்தர் மன்னர் ஜவகரிடம் மனு கொடுத்தனர்.
மாணவி ஜோதி மரணம் குறித்து தனி விசாரணை குழு அமைக்க வேண்டும் என்று அவரிடம் வலியுறுத்தினர்.
இதுபற்றி ராஜ் மோகன் கூறுகையில்,
அண்ணா பல்கலைகழ கத்தில் ராக்கிங் நடைபெறவில்லை என்று துணை வேந்தர் கூறியதை வன்மையாக கண்டிக்கிறோம். மாணவி ஜோதி விவகாரம் தொடர்பாக இதுவரை பல்கலைக்கழகம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதுகுறித்து விசாரிக்க தனி விசாரணை கமிட்டி அமைக்க வேண்டும். முன்னாள் துணைவேந்தர்கள், சமூக ஆர்வலர்கள் இதில் இடம் பெற வேண்டும் என்றார்.