பலத்த பாதுகாப்புக்கு இடையில் நாளை மறுதினம் இம்மானுவேல் சேகரன் குரு பூஜை
பரமக்குடி: தலித் தலைவர் இம்மானுவேல் சேகரனின் குரு பூஜை வரும் சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்காக மாவட்டத்தின் பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து ராமநாதபுரம் மாவட்டஎஸ்.பி. பிரதீப் குமார் கூறியதாவது,
மதுரை, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து சுமார் 2,000 போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5 எஸ். பி., 8 கூடுதல் எஸ். பி., 21 துணை எஸ். பி. ஆகியோர் அடக்கம்.
பார்த்திபனூரில் இருந்து திருப்புவனம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 49 மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும். கமுதக்குடி, காட்டு பரமக்குடி, தெலிச்சாத்தநல்லூர், மரிச்சுகட்டி ஆகிய பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும்.
பரமக்குடி, பார்த்திபனூர் உள்ளிட்ட இடங்களில் கலவரத்தைக் கட்டுபடுத்தும் வஜ்ரா, வருண் வாகனங்கள் நிறுத்தப்படும். மேலும், நிறைய வாகனங்கள் ரோந்துப் பணியில் ஈடுபடும்.
இது தவிர சாதாரண உடை அணிந்த போலீசார் மக்களுடன் மக்களாகக் கலந்து கண்காணிப்பர். இந்த குரு பூஜை அமைதியான முறையில் நடக்க நாங்கள் உதவுவோம். அதே நேரத்தில் சட்டத்தை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பரமக்குடிக்கு வரும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்படும். எளிதாக தீப்பிடிக்கும் பொருட்கள் மற்றும் ஆயுதங்களை யாரும் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படமாட்டாது. சவுண்ட் குழாய்களுக்கும் அனுமதி இல்லை.
வாகனங்களின் மேலே யாரும் பயணிக்கக் கூடாது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த போக்குவரத்து பாதைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. வரும் சனிக்கிழமை மட்டும் மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்பவர்கள் மாற்று வழியில் தான் செல்ல வேண்டும். பயணிகளின் பாதுகாப்பு கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications