யாரையும் நம்ப முடியலை, பிறகெப்படி ஒரே கூட்டணியில் நீடிப்பது?-கேட்கிறார் ராமதாஸ்
சென்னை: அடிக்கடி கட்சித்தாவல் செய்வதாக குறைகூறுகின்றனர். யாரையும் நம்ப முடியவில்லை. நம்மையல்லவா அழிக்க நினைக்கின்றனர். பின் எப்படி ஒரே கூட்டணியில் நீடிப்பது? என்று கேட்டுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த ஊத்தாங்காலில் புவனகிரி சட்டசபை தொகுதி இளைஞர் இளம் பெண்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது,
தமிழகத்தை எத்தனையோ பேர் ஆட்சி செய்துள்ளனர். ஆனால் ஒற்றுமையின்மையால் இதுவரை ஒரு வன்னியன் கூட ஆளவில்லை.
பணம், பொருள் வாங்கிக் கொண்டு ஓட்டு போடுகின்றனர். அரசியல் ஆண்களுக்கு மட்டுமில்லை பெண்களுக்கும் தான். அவர்களுக்கு அரசியல் பற்றி தெரிய வேண்டும்.
தமிழக இளைஞர்கள் ஒன்று கூடி பாமகவில் இணைய வேண்டும். அவ்வாறு நடந்தால் 100 தொகுதிகளில் பாமக வெற்றி பெறுவது உறுதி.
கடந்த லோக்சபா தேர்தலில் வன்னியர்கள் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதற்காகவே பணத்தை தண்ணியாக செலவழித்து நம்மை தோற்கடித்தனர். கட்சியை பலப்படுத்த இளைஞர்களை பொறுப்பில் நியமிக்க வேண்டும்.
என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைக்கும் அவர்களுக்கு மாதம் ரூ. 10,000 ஊதியம் கொடுக்க வேண்டும்.
இப்பகுதிகளில் நாங்கள் ஏற்கனவே பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். நாங்கள் தீவிரமாக போராடுவது என்று முடிவெடுத்துவிட்டால் அதை என்.எல்.சி. யால் தாங்க முடியாது. ஆகையால் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வைக்க வேண்டும்.
புவனகிரி தொகுதியில் 10 பேர் எம்.எல்.ஏ. ஆகும் கனவு கண்டு கொண்டிருக்கின்றனர். தேர்தல் தேதி அறிவித்த பிறகே வேட்பாளரை அறிவிப்போம். அதிலும் குறிப்பாக கட்சிக்காக அயராது உழைப்பவர்களுக்குத் தான் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர் கூறினார்.