ராஜபக்சே வருகைக்கு சட்ட மாணவர்கள் எதிர்ப்பு-கொடும்பாவி எரிப்பு
உலகம் முழுவதும் ராஜபக்சே மீது தமிழர்கள் கடும் கோபத்துடன் உள்ள நிலையில், அவர் மீது பல்வேறு போர்க்குற்றச்சாட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் அதைப் பொருட்படுத்தாமல் டெல்லி காமன்வெல்த் போட்டி நிறைவு விழாவின் சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளது மத்திய அரசு.
இதற்கு தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சிகள், அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், சேலம் மாவட்டம் ஏற்காடு மெயின் ரோட்டில் இருக்கும் தனியார் சட்டக்கல்லூரி மாணவர்கள் இலஙகை அதிபர் ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது கொடும்பாவியை எரித்தனர். கொடும்பாவி எரித்த சம்பவத்தில் ஈடுபட்ட 15 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்
இதேபோல சென்னை மாவட்ட ஆட்சிர் அலுவலகம் எதிரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் ராஜா தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ராஜபக்சேவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
உலகமே போர் குற்றவாளியாக பார்க்கும் இலங்கையை பாதுகாக்க இந்தியா தொடர்ந்து துணை போய் கொண்டிருப்பது இந்தியாவில் வாழும் ஏழரை கோடி தமிழ் மக்களை மட்டுமல்லாமல் உலகெங்கும் வாழும் தமிழர்களையும் கொதிப்படைய செய்துள்ளது என்றும், தமிழின விரோத போக்கை நாம் தமிழர் கட்சி மிக வன்மையாக கண்டிக்கிறது என்றும், இலங்கை அதிபர் ராஜபக்சே பங்குபெறும் நிறைவு விழாவை தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து தமிழக மத்திய அமைச்சர்களும், எம்.பி.க்களும் புறக்கணிக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.
தமிழக மத்திய அமைச்சர்கள் புறக்கணிக்க கோரிக்கை
முன்னதாக நாம் தமிழர் கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை...
இலங்கையில் நடைபெற்ற தமிழர்களுக்கு எதிரான போரில் ஒரு லட்சம் ஈழத்தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவும் அவரைச் சார்ந்தவர்களும் ஐ.நா. மன்றம் மூலம் மர்டுகி தருஷ்மன் தலைமையில் போர்க் குற்றவாளியாக விசாரிக்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வட அயர்லாந்து டப்ளின் மக்கள் தீர்ப்பாயம் மேற்கொண்ட விசாரணை மூலம் 20 க்கும் மேற்பட்ட ஆதாரங்களை காட்டி இலங்கை அதிபர் ராஜபக்சே ராணுவ அமைச்சர் கோத்தபய ராஜபக்சே உள்ளிட்டோர் மீது ஐ.நா. மன்றம் விசாரணை நடத்த வேண்டுமென பரிந்துரை செய்துள்ளது.
நார்வே, சுவிட்சர்லாந்து, இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கான ஆதாரங்களை திரட்டி அந்தந்த நாட்டு நீதிமன்றங்களில் ராஜபக்சேவுக்கு எதிராகப் போர் குற்றவழக்குகள் தொடுத்து வருகின்றனர்.
அமெரிக்காவில் உள்ள இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் என்னும் அமைப்பு 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனித உரிமைகள் மீறல்கள் போர் குற்ற ஆதாரங்களை தொகுத்து அமெரிக்கா சென்ட் அவையிடம் தந்து ராஜபக்சே மீது போர் குற்ற விசாரணை நடத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துவது போல் காமன்வெல்த் விளையாட்டு போட்டி நிறைவு விழாவில் ராஜபக்சேவை சிறப்பு விருந்தினராக அழைக்கும் இந்தியாவின் செயல் கண்டிக்கத்தக்கதாகும்.
உலகமே போர் குற்றவாளியாக பார்க்கும் இலங்கையை பாதுகாக்க இந்தியா தொடர்ந்து துணை போய் கொண்டிருப்பது இந்தியாவில் வாழும் ஏழரை கோடி தமிழ் மக்களை மட்டுமல்லாமல் உலகெங்கும் வாழும் தமிழர்களையும் கொதிப்படைய செய்துள்ளது.
அண்மையில் ராஜபக்சே அமெரிக்கா சென்றிருந்தபோது நியூயார்க் நகரில் அளித்த விருந்தை சர்வதேச நாடுகள் அனைத்தும் புறக்கணித்து எதிர்ப்பை வெளிப்படுத்தியது. ஆனால் போர்க்குற்றவாளியான ராஜபக்சேவை காப்பாற்ற காமன்வெல்த் நிறைவு விழாவில் ரத்தின கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இந்த தமிழின விரோத போக்கை நாம் தமிழர் கட்சி மிக வன்மையாக கண்டிக்கிறது. இலங்கை அதிபர் ராஜபக்சே பங்குபெறும் நிறைவு விழாவை தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து தமிழக மத்திய அமைச்சர்களும், எம்.பி.க்களும் புறக்கணிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.