கற்பழிப்புப் புகார்... பாதிரியாருக்கு ஆதரவாக பெண்கள் ஆர்ப்பாட்டம்!

கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகார்:
கன்னியாஸ்திரி பிளாரன்ஸ்மேரி கற்பழிப்பு விவகாரம் பூதாகாரமாக எழுந்துள்ளது.
பாதிரியார் ராஜரத்தினம் 2006-ம் ஆண்டில் மயக்க மருந்து கொடுத்து கற்பழித்ததாகவும் அதை செல்போனில் படம் பிடித்து மிரட்டி பலமுறை உடல் உறவு கொண்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார் பிளாரன்ஸ் மேரி. இதுகுறித்து கோட்டை மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதைத் தொடர்ந்து பாதிரியார் ராஜரத்தினம் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டது. கைது நடவடிக்கையில் இருந்து தப்ப பாதிரியார் ராஜரத்தினம் மதுரை ஐ கோர்ட்டில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. பாதிரியாருக்கு முன்ஜாமீன் வழங்க கூடாது என்றும் அவர் மேலும், 2 கன்னியாஸ்திரிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்றும் கன்னியாஸ்திரி தரப்பில் வாதாடப்பட்டது.
பாதிரியாரால் தனக்கு ஏற்பட்ட கொடுமைகள் குறித்தும் பிளாரன்சு மேரி 25.8.2010-ல் சபைக்கு 4 பக்க கடிதம் கொடுத்து உள்ளார். அதில் பாதிரியார் செக்ஸ் லீலைகள் பற்றியும் விரிவாகக் கூறியுள்ளாராம். அவர் தமிழில் எழுதி கொடுத்த கடிதம் தற்போது புனித அன்னாள் சபையிடம் உள்ளது. அதைப் பெற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி நேற்று உத்தரவிட்டார்.
அந்த கடிதத்தில் பிளாரன்ஸ்மேரி, பாதிரியார் ராஜரத்தினம் தன்னை வற்புறுத்தி வலையில் வீழ்த்தியது, கர்ப்பம் ஆக்கியது, கருக்கலைப்பு செய்தது வரை குறிப்பிட்டுள்ளார். நடந்த தவறுக்கு மன்னிப்பு அளித்து தன்னை மீண்டும் சபையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
பாதிரியார் பெயர் நீக்கம்:
ஆனால் பிளாரன்சு மேரி எழுதிய கடிதத்தை சபையின் முக்கிய பிரமுகர் அதை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து உள்ளார். அப்போது பிளாரன்ஸ் மேரி குறிப்பிட்டதுபோல கர்ப்பம் மற்றும் கருக்கலைப்பு, பாதிரியார் ராஜரத்தினம் பெயர் ஆகியவற்றை எடுத்து விட்டு அதில் ஒரு பாதிரியார் என்று மட்டும் குறிப்பிட்டிருந்தார். அதில் பிளாரான்ஸ் மேரியை வற்புறுத்தி கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள்.
அதன் பிறகுதான் பிளாரான்சு மேரியை சபையை விட்டு நீக்கி உள்ளனர். இதனால் பாதிரியார் ராஜரத்தினத்தை அனைவரும் சேர்ந்து காப்பாற்றிவிட்டு தன்னை மட்டும் சபையைவிட்டு நீக்கி, அவமானப்படுத்தி விட்டார்களே என பிளாரன்சுமேரி மனமுடைந்தார். 1 மாதம் நிம்மதியில்லாமல் தவித்தவர் கடைசியில் போலீசில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரில் பாதிரியாருக்கு மேலும் 2 கன்னியாஸ்திரிகளுடன் தொடர்பு இருந்ததை கூறியுள்ளார். தன்னை வலையில் வீழ்த்தும்போது அவர்கள் 2 பேர் பெயரை குறிப்பிட்டு அவர்களை கவனித்துக் கொண்டது போல் உன்னையும் கவனித்துக் கொள்கிறேன் என்று பாதிரியார் ராஜரத்தினம் கூறியதாக தெரிவித்துள்ளார்.
ஆதராவாக போராட்டம்:
இந்த நிலையில், கற்பழிப்புப் புகாருக்கு உள்ளான பாதிரியாருக்கு எதிராகவும், ஆதரவாகவும் தினசரி போராட்டங்கள் நடந்து வருகிறது.
பல்வேறு அமைப்புகள் சார்பில் போஸ்டர்களும் நகரில் ஒட்டப்பட்டு உள்ளன. இந்த நிலையில் இன்று பாதிரியார் ராஜரத்தினத்துக்கு ஆதரவாக பெண்கள் போராட்டத்தில் குதித்தனர்.
பெரியார் திராவிடர் கழகம், புனித லூர்து அன்னை ஆலய பங்கு பெண்கள், தலித் கிறிஸ்தவ விடுதலை இயக்கம் ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் இன்று காலை திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே திரண்டனர்.
பாதிரியார் ராஜரத்தினம் தாழ்த்தப்பட்டவர் என்பதால் அவரை பதவி நீக்கம் செய்து உயர் பதவிக்கு வருவதை தடுக்கிறார்கள், இது தீண்டாமை செயல், எனவே அவரை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும் என்று போராட்டடத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷம் போட்டனர். சார்லஸ் ரிச்சர்டு தலைமையில் இந்த போராட்டம் நடந்தது.
பிறகு அவர்கள் மறியலுக்கு முயன்றனர். உடனே அவர்களை போலீசார் கைது செய்தனர். பெரியார் திராவிடர் கழக தலைவர் ராஜேந்திரன் மற்றும் பால்பிரபாகரன், தலித் ஆரோக்கியதாஸ் உள்பட 79 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் 42 பேர் பெண்கள் ஆகும். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications