மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், தூத்துக்குடியில் பேய் மழை-வைகை அணை திறப்பு-பள்ளிகள் மூடல்
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றுச் சுழற்சி தொடர்ந்து இலங்கையின் மீது நிலவி வருவதால் தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக இங்கு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மூன்று மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
வைகை அணை நிரம்பியது:
வைகை அணை இன்று காலை 69 அடியைத் தாண்டியது. மொத்த கொள்ளளவு 71 அடியாகும். அணை நிரம்பியதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணை திறக்கப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் முத்து வீரன் அணையைத் திறந்து வைத்தார்.
இதையடுத்து வைகை ஆற்றுப் பாசன மாவட்டங்களான தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்து.
தொடர்ந்து பேய் மழை பெய்து வருவதால், சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர்.
கொடைக்கானல் போக்குவரத்து பாதிப்பு:
தொடர் மழை காரணமாக கொடைக்கானலில், டம்டம் பாறை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள் சாலையில் விழுந்து கிடக்கின்றன.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் சரிவை சரி செய்யும் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.
இதன் காரணமாக பெரியகுளம்-கொடைக்கானல், வத்தலகுண்டு-கொடைக்கானல், பழனி-கொடைக்கானல் ஆகிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். அது போக 20க்கும் மேற்பட்ட கிராமங்களும் துண்டிக்கப்பட்டுள்ளன.
இதுவரை 87 பேர் பலி:
தமிழகத்தில் பெய்து வரும் மழைக்கு இதுவரை 87 பேர் உயிரிழந்துள்ளனர்.
திடீர் வெள்ளம், மின்னல், இடி தாக்குதல், வீடுகள் இடிந்து விழுதல் ஆகிய சம்பவங்களில் இவர்கள் இறந்துள்ளனர்.
நவம்பர் 1ம் தேதி தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை தொடங்கியது. அன்றிலிருந்து இதுவரை பரவலாக கன மழை பெய்து வருகிறது. தற்போது தென் மாவட்டங்களில் மழை கடுமையாக உள்ளது.
மழைக்கு இதுவரை 87 பேர் இறந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில்தான் அதிக அளவாக 17 பேர் இறந்துள்ளனர்.
தொடர் மழை காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்துஅணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன.
கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆறு, திருச்சி மாவட்டம் கொள்ளிடம் ஆகியவற்றில் தண்ணீர் இரு கரைகளையும் தொட்டபடி ஓடிக் கொண்டிருக்கிறது.
அமராவதி ஆற்றில் வெள்ளப் பெருக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொள்ளிடத்தில் இதுவரை வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படவில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அம்பாசமுத்திரத்தில் 11 செமீ மழை பெய்துள்ளது.
தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடபகுதிகளிலும், கடலோர மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.