நெல்லை அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல்: பெரும் விபத்து தவிர்ப்பு
நெல்லை: நெல்லை அருகே ரயி்ல் தண்டவாளத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டது. சரியான நேரத்தில் ஊழியர்கள் கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு நேற்று மாலை 6 மணிக்கு பயணிகள் ரயில் புறப்பட்டு வந்தது. அப்போது ரயில்வே கேங்மேன்கள் இருவர் பாளையங்கோட்டை தியாகராஜநகர் வழியாக சென்றபோது ஒரு இடத்தில் தண்டவளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதை பார்த்தனர். அவர்கள் உடனே இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு ரயில்வே உயர் அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். இதற்கிடையே திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு புறப்பட்ட ரயில்கள் 7.40 மணிக்கு பாளையை நெருங்கியது. இதையடுத்து கேங்மேன்கள் ரயில் கடந்து செல்ல வசதியாக விரிசல் ஏற்பட்ட இடத்தில் இரும்புத் துண்டுகளைப் பொருத்தினர்.
பின்னர் அந்த வழியாக ரயில் குறைந்த வேகத்தில் கடந்து சென்றது. தொடர்ந்து அதிகாரிகள் இரவோடு இரவாக விரிசலை சரி செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்ட பகுதியை அப்புறப்படுத்தி அந்த இடத்தில் 15 அடி நீளத்துக்கு புதிய தண்டவாளத்தை பொருத்தி வெல்டிங் செய்யப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் சரியான நேரத்தில் விரிசலை கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.