ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராஜாவை குற்றவாளியாக சேர்க்க சாமி மனு-ஜன. 7ம் தேதி தீர்ப்பு

இன்று காலை சிபிஐ கோர்ட்டுக்கு வந்த சாமி, சிறப்பு நீதிபதி பிரதீப் சத்தா முன்பு தனது மனுவைத் தாக்கல் செய்த சாமி தானே அரை மணிநேரம் வாதாடினார். ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக சிபிஐ தனக்கு அனுப்பிய கடித தகவலையும் அவர் நீதிபதியிடம் சமர்ப்பித்தார்.
பின்னர் சாமி வாதிடுகையில், என்னை இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக சேர்க்க வேண்டும். ராஜா மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபணமாகி வருகின்றன. எனவே அவருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும். அவரை ஒரு குற்றவாளியாக வழக்கில் சேர்க்க வேண்டும் என்றார்.
மனுவை விசாரித்த பின்னர் ஜனவரி 7ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிபதி சத்தா அறிவித்து அன்றைய தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
வழக்கைத் தாக்கல் செய்வதற்கு முன்பு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ராஜாவுடன் தொடர்புடைய ஹவாலா புரோக்கர்கள் குறித்த விவரம் இன்று நடந்த சிபிஐ விசாரணையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஹவாலா புரோக்கர் மகேஷ் ஜெயினுக்கும், ராஜாவுக்கும் இடையிலான தொடர்புகள் அவரது டைரி மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதுவே ராஜாவுக்கு எதிரான முக்கியமான ஆதாரமாக உருவெடுத்துள்ளது. எனவே ராஜா மீது விசாரணை நடத்த வேண்டும், அவரை குற்றவாளி என்று அறிவிக்க வேண்டும் என கோர்ட்டில் கோரவுள்ளேன்.
ராஜாவை இன்றே கோர்ட் குற்றவாளி என்று அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கிறேன்.
ராடியாவின் தலையீடு இல்லாமல் போயிருந்தால் ராஜா நிச்சயம் அமைச்சராகியிருக்க மாட்டார். ராடியாவின் ஊடுறுவல் எதிர்க்கட்சிகள் வரையும் பரவியுள்ளது. தனது செல்வாக்கைப் பயன்படுத்தி ராஜாவை தொலைத் தொடர்பு அமைச்சராக்கியுள்ளார் ராடியா. தயாநிதி மாறன் அமைச்சராகக் கூடாது என்பதில் அவர் தீவிரமாகவும் இருந்துள்ளார். இந்த நன்றிக் கடனுக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் ராஜா, ராடியாவுக்கு செய்துள்ளார் என்றார் சாமி.












Click it and Unblock the Notifications