ஜன. 9ல் சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதிக்கு ஜெ. பயணம்
சாமித்தோப்பை அய்யா வைகுண்டர் தலைமைப் பதிக்கு அன்றைய தினம் சென்று வழிபடுகிறார் ஜெயலலிதா.
சமீபத்தில் அருமனையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் சிறப்பு விருந்தினராக ஜெயலலிதா கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இதையடுத்து ஜனவரி 6ம் தேதி அவர் மீண்டும் கன்னியாகுமரி சென்று, சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப் பதியில் வழிபடுவதாக இருந்தது. தற்போது அதில் சிறு மாற்றம்.
அய்யாவழி மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விசேஷ நாள் என்பதால், அந்த தினத்தில் வரவேண்டும் என்று அன்பு கொடி மக்கள் மற்றும் தலைமைபதி நிர்வாகிகள் சார்பில், ஜெயலலிதாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை ஏற்று, வரும் 9ம் தேதி ஜெயலலிதா சாமித்தோப்பு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சாமித்தோப்பு தலைமைபதி நிர்வாகி பாலபிராஜபதி அடிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா வரும் ஜனவரி 6ம் தேதி சாமித்தோப்பு தலைமைபதிக்கு வருவதாக கூறியிருந்தார். ஆனால் அன்பு கொடி மக்கள் சார்பில் ஞாயிற்றுகிழமை வரவேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம்.
எங்களது கோரிக்கையை ஏற்று வரும் ஜனவரி 9ம் தேதி வருவதாக அவர் உறுதியளித்துள்ளார். அந்தவகையில் 9ம் தேதி மதியம் 2.30 மணிக்கு சாமித்தோப்பு தலைமை பதிக்கு வருகிறார். தரிசனம் முடிந்த பின்னர் அவர் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து சென்னை செல்கிறார் என்று அவர் தெரிவித்துள்ளார்.