பெரியபட்டினம் கடலில் விபத்துக்குள்ளாகியவர்களை மீட்கவில்லை கடலோரக் காவல் படை-தா.பாண்டியன் புகார்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ராமநாதபுரம் மாவட்டம், பெரியபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த சில குடும்பங்கள் அருகேயுள்ள தீவுக்குச் சுற்றுலா சென்றபோது, படகு கவிழ்ந்து 16 பேர் வரை உயிரிழந்ததாகத் தெரிகிறது.
இதில் மீட்புப் பணிகளில் கடலோர காவல் படை பயன்படுத்தப்படவில்லை. இது மிகவும் வருத்தத்துக்குரியது. பொதுமக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், கட்சியின் பகுதி செயலாளர் முபாரக் தலைமையில் தனிப் படகில் சென்று 5 பேரைக் காப்பாற்றியுள்ளனர்.
கடலில் முழ்கி உயிருக்கு போராடியவர்களை மீட்டு வந்தவுடன், கரையில் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க மருத்துவக் குழு ஏற்பாடு செய்யப்படவில்லை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கவும் தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.