கடையநல்லூரில் கலர் டிவி வழங்கும் விழாவில் காங்-தேமுதிக அடிதடி
கடையநல்லூர்: கடையநல்லூர் பகுதியில் இலவச கலர்டிவி வழங்கும் நிகழ்ச்சியில் காங்கிரசாருக்கும், தேமுதிகவினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக தேமுதிக நிர்வாகிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடையநல்லூர் பகுதியில் சுமார் 23 ஆயிரம் டிவிக்கள் வேண்டும் என வருவாய்துறையினர் நடத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்தது. இந்த நிலையில் பயனாளிகளுக்கு வழங்குவதற்காக சுமார் 15 ஆயிரம் டிவிக்கள் வந்திறங்கின. நேற்று வினியோகம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
தொகுதி எம்.எல்.ஏவான பீட்டர் அல்போன்ஸ், மேலக்கடையநல்லூர் திருமண மண்டபம், கடையநல்லூர் மசுதைக்கா பள்ளி ஆகிய இடங்களில் தலா ஒருவருக்கு டிவி வழங்கிவிட்டு மாவடிக்கால் பகுதியில் வழங்குவதற்காக சென்றார்.
அப்போது அப்பகுதி மக்கள் மற்றும் தேமுதிகவினர் ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் டிவி வழங்க வேண்டுமேன வலியுறுத்தி பீட்டர் அல்போன்ஸ் எம்எல்ஏ மற்றும் வருவாய் துறை அதிகாரிகளை முற்றுகையிட்டனர். அவர்களுக்கும், காங்கிரசாருக்கும் மோதல் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே கைகலப்பும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
போலீசார் தலையிட்டும் பிரச்சனை முடிவுக்கு வராததால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது. புளியங்குடி டிஎஸ்பி ஜமீம், மற்றும் போலீசார் கூட்டத்தினரை விரட்டியதால் பலர் தலை தெறிக்க ஓடினர். பொதுமக்கள் சிலர் ரோட்டில் அமர்ந்து திடீர் ஆர்ப்பாட்டம் செய்தனர். போலீசார் அவர்களை கலைத்தனர்.
இந்நிலையில் மோதலில் ஈடுபட்டதாக தேமுதிக நிர்வாகிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது அனுமதியில்லாமல் போராட்டம் நடத்தியது, அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.