ராடியாவுக்கு அரசு ரகசியங்களை தந்த அனந்த்குமார்: மத்திய அரசு விசாரிக்க முடிவு!
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பாஜக பொதுச் செயலாளர் அனந்த்குமார் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது அவரது அலுவலகத் தகவல்களை நீரா ராடியாவிடம் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து மத்திய அரசு விசாரணை நடத்தும். அலுவலக ரீதியிலான முடிவுகள், ராடியாவுக்குத் தெரியப்படுத்தப்பட்டிருந்தால் அது நிச்சயம் தவறாகும். சாதாரண தவறு அல்ல, தேச துரோக செயலாகும்.
டிசம்பர் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு லோக்சபா சபாநாயகர் மீரா குமார் ஏற்பாடு செய்துள்ளார். அதில், நாடாளுமன்றத்தில் நிலவி வரும் அமளியைப் போக்குவரத்து குறித்து விவாதிக்கப்படும்.
நாடாளுமன்றத்தை கிட்டத்தட்ட 22 நாட்கள் முடக்கி வைத்து விட்டது பாஜக. இது ஜனநாயக விரோத செயலாகும். அரசியல் உள்நோக்கத்துடன் கூடிய செயல் இது.
நாடாளுமன்றம் செயல்படாமல் போனதால் மத்திய அரசுக்கு ரூ. 33 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஜேபிசி விசாரணை தேவை என்று கோரி வருகின்றன எதிர்க்கட்சிகள். ஒருவேளை ஜேபிசி அமைக்கப்பட்டாலும் கூட அதில் இடம் பெறும் அளவுக்கு பல எதிர்க்கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தில் போதிய பலம் இல்லை. ஜேபிசியில் இடம் பெற ஒரு அரசியல் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் குறைந்தது 17 உறுப்பினர்களாவது இருக்க வேண்டும் என்பது விதியாகும். இதை எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
பொதுக் கணக்குக் கமிட்டிக்கு நிறைய அதிகாரங்கள் உள்ளன. எனவே அதன் விசாரணையே போதுமானதாகும்.
கடந்த காலங்களில் ஜேபிசி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டபோதெல்லாம் எதுவுமே முடிவுக்கு வரவில்லை, பலன் தரவில்லை. இதன் காரணமாகத்தான் ஜேபிசி விசாரணையை ஏற்க காங்கிரஸ் மறுத்து வருகிறது. வேறு எந்தக் காரணமும் இதற்குப் பின்னால் இல்லை.
போபர்ஸ் பேர ஊழல் விவகாரத்தை ஜேபிசி விசாரித்தது. பங்குச் சந்தை ஊழல் விவகாரத்தை விசாரித்தது. கோலா நிறுவனத்திற்கு எதிரான விவகாரத்தை விசாரித்தது. ஆனால் எதிலுமே உரிய பலன் கிடைக்கவில்லை என்றார் நாராயணசாமி.