கடும் சோதனைக்கு எதிர்ப்பு-பாளை சிறையி்ல் கைதிகள் உண்ணாவிரதம்
நெல்லை: சிறையில் தரமான உணவு வழங்கப்படவில்லை என்றும், சுவையாக உணவு வழங்க கோரியும் தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த சிலர் இன்று பாளையங்கோட்டை சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர்.
பாளை மத்திய சிறையில் செல்போன், சிம்கார்டு, கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் புழக்கத்தை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கைதிகள் மற்றும் அவர்களை பார்க்க வரும் உறவினர்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
இதுதவிர சிறை காவலர்கள், வார்டன்கள், சோதனை செய்த பிறகு அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் பீடி, சிகரெட்டுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து கைதிகள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் சிறையில் தரமான உணவு வழங்கப்படவில்லை என்றும், சுவையாக உணவு வழங்க கோரியும் தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த முகமது காசிம், மீரான் மைதீன் உள்ளிட்ட 10 கைதிகள் இன்று காலை சாப்பிட மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து சிறை கண்காணி்ப்பாளர் ஆனந்த் கைதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி இனிமேல் இப்படி நடக்காது, நான் உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என சிறை கண்காணிப்பாளர் உறுதி அளித்தார். இருப்பினும் கைதிகள் இதை ஏற்றுகொள்ளவில்லை. தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.