புத்தாண்டு-கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
சென்னை : 2011ம் ஆண்டு பிறப்பையொட்டி தமிழகம் முழுவதும் கோவில்களில் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு 12 மணிக்கு 2010ம் ஆண்டு முடிந்து 2011ம் ஆண்டு பிறக்கிறது. இதை வரவேற்க உலகம் முழுவதும் மக்கள் தயாராகி வருகிறார்கள்.
இந்தியாவிலும் கொண்டாட்டங்கள் களை கட்டத் தொடங்கியுள்ளன. மேலும் கோவில்களிலும் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கியக் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளன.
சென்னை வடபழனி முருகன் கோவிலில் ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி பக்தர்கள் தரிசனத்துக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மூலவருக்கு அதிகாலை 3 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட உள்ளது.
ஜனவரி 1-ந்தேதி அதிகாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை தொடர்ந்து தரிசனத்திற்கு திருக்கோவில் நடை திறந்து இருக்கும். அதிகாலை 4 மணி முதல் பகல் 12 மணி வரை வெள்ளி நாணயத்தில் அலங்காரம் செய்யப்படுகிறது. பகல் 1 மணி முதல் மாலை 4 மணிவரை தங்க கவசம் அலங்காரம் செய்யப்படுகிறது.
மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வர புஷ்ப அங்கி அலங்காரமும் நடைபெறுகிறது. அதிகாலை சேவார்த்திகளுக்கு சர்க்கரைப் பொங்கல் பிரசாதமாக வழங்கப்படும்.
பக்தர்கள் வசதியாக சென்று சாமி தரிசனம் செய்வதற்காக தெற்கு கோபுரவாசலில் 2 வகை வரிசைகள் கட்டப்பட்டுள்ளது.
விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் சீர்காழி சிவசிதம்பரம், துணை ஆணையர் காவேரி மற்றும் அறங்காவலர்கள் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications