நாளை மாலை ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கை வெளியீடு: சிதம்பரம் அறிவிப்பு
ஹைதராபாத்: தெலுங்கானா விவகாரம் குறித்து சமர்பிக்கப்பட்டுள்ள ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் அறிக்கை நாளை மாலை அனைத்துக் கட்சி கூட்டத்திற்குப் பின் வெளியிடப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் இருந்து பிரித்து தெலுங்கானாவை தனிமாநிலமாக அறிவிக்கக் கோரி தெலுங்கானா கூட்டு போராட்ட குழு கடந்த பல ஆண்டுகளாக வற்புறுத்தி வருகிறது.
இந்த கோரிக்கையை முன்வைத்து தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகரராவ் கடந்த சில மாதங்களுக்கு முன் காலைவரையற்ற உண்ணாவிரதம் இருந்தார். இதனால் தெலுங்கானா பகுதி கலவர பூமியாக காட்சியளித்தது. இதற்கிடையே ஆந்திராவை பிரிக்கக் கூடாது என்று ராயலசீமா- கடலோர ஆந்திரா பகுதியை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து தெலுங்கானாவை தனி மாநிலம் ஆக்கலாமா இல்லையா என்பது குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியை அமைத்தது. அந்த கமிட்டி தனது அறிக்கையை உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்திடம் கடந்த டிசம்பர் மாதம் 30-ம் தேதி சமர்பித்தது.
அதன் பின்னர் சிதம்பரம் நாளை இந்த அறிக்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார். இதை புறக்கணிப்பது என்பது பாஜக, ராஷ்ட்ரீய சமிதி, தெலுங்கு தேசம் கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதற்கிடையே அறிக்கை விவரத்தை வெளியிட்டால் ஆந்திராவில் கலவரம் வெடிக்கும் அபாயம் இருப்பதால் அங்கு 7 ஆயிரம் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கூட்டம் நாளை நடக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் திட்டமிட்டவாறு கூட்டம் நடக்கும் என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் அறிக்கை குறித்து விவாதிக்கக் கூட்டப்பட்டுள்ள அனைத்துக் கட்சி கூட்டம் நாளை டெல்லயில் திட்டமிட்டபடி நடக்கும். இதில் கலந்து கொள்ளுமாறு அங்கீகரிக்கப்பட்ட 8 கட்சிகள் அழைக்கப்பட்டுள்ளன. இதில் ஆந்திரக் கட்சியில் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்.
இந்த கூட்டம் முடிந்த பின் மாலை 5 மணிக்கு ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கை வெளியிடப்படும். இதை பொதுமக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் உள்துறை அமைச்சக இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அதில் கூறியிருந்தது.
இதற்கிடையே, ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கையில் தெலுங்கானா மாநிலம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருப்பதாக வெளியான செய்தியால் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications