பால் கொள்முதல் விலை உயர்வு-ஆவின் பால் விற்பனை விலை உயராது
சென்னை: பால் உற்பத்தியாளர்களிடமிருந்து அரசு வாங்கும் பாலுக்கான விலை உயர்த்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பொது மக்களுக்கு ஆவின் மூலம் விற்கப்படும் பாலின் விலை உயர்த்தப்படாது என்றும் முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
2006ம் ஆண்டு முதல்வர் கருணாநிதி தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பின் பால் உற்பத்தியாளர்களின் நலன் கருதி 7.3.2007 அன்று 10 ரூபாய் 50 காசுகள் என இருந்த பசும்பால் கொள்முதல் விலையினை 1 ரூபாய் 50 காசுகள் உயர்த்தி 12 ரூபாய் என கொள்முதல் செய்யப்பட்டது.
அதன் பின்னர் 10.3.2008ல் அதனை மேலும் 2 ரூபாய் உயர்த்தியும், 1.9.2009 அன்று 2 ரூபாய் உயர்த்தியும் ஆக மொத்தம் கடந்த 4 ஆண்டு காலத்தில் பசும்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் 50 காசுகள் என கொள்முதல் விலையை உயர்த்தியும், எருமைப் பாலுக்கு 7.3.2007ல் 1 ரூபாய் 50 காசுகளும், 10.3.2008ல் 4 ரூபாயும், 1.9.2009ல் 5 ரூபாயும் உயர்த்தி, கூடுதலாக எருமைப் பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 10 ரூபாய் 50 காசுகள் என கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது பால் உற்பத்தியாளர்களின் நலன் கருதி பால் கொள்முதல் விலையினை உயர்த்திக் கொடுக்க வேண்டுமென்ற நல்லெண்ணத்துடன் முதல்வர் கருணாநிதி பசும்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 1ரூபாய் 10 காசுகளும்,
எருமைப் பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் 20 காசுகளும் உயர்த்தி வழங்கிட ஆணையிட்டுள்ளார். இந்த கொள்முதல் விலை உயர்த்தி வழங்குவதால் நுகர்வோர் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தற்போது "ஆவின்"மூலமாக விநியோகம் செய்யப்படும் பால் விற்பனை விலையை உயர்த்துவதில்லை என்றும் அரசு முடிவெடுத்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.