திமுக கூட்டணியில் பாமக: மூழ்கும் கப்பலில் ஏறியதற்கு சமம்-சிபிஐ
நிருபர்களிடம் பேசிய அவர், நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் மக்கள் காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். இந்தக் கூட்டணியில் போய் பாமக சேர்ந்திருப்பது, மூழ்கும் கப்பலில் ஏறியிருப்பதற்குச் சமம்.
டாஸ்மாக் கடைகளைத் திறந்ததைத் தவிர வேறு எந்த உருப்படியான வேலையையும் திமுக செய்யவில்லை என்று குற்றம் சாட்டிய டாக்டர் ராமதாஸ் எப்படி திமுக கூட்டணியில் சேர்ந்தார். தனது கடந்த கால பேச்சுக்களுக்கு அவர் என்ன பதில் சொல்லப் போகிறார்.
அதிமுக தலைமையில் அமைகின்ற கூட்டணி பெரிய வெற்றியைப் பெறப் போவது உறுதி. தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பது தடுக்கப்பட வேண்டும்.
வெளிநாடுகளில் வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கு நாங்கள் தொடர்ந்து குரல் எழுப்புவோம்.
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் தொடர்கதையாக உள்ளது. சமீபத்தில் 100க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று இலங்கை அதிபர் ராஜபக்சே உண்மைக்கு மாறான தகவல்களைக் கூறிவருகிறார்.
இலங்கையைத் தவிர யாரும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பே இல்லை. இந்தப் பிரச்சனயை ஐக்கிய நாடுகள் சபைக்கு இந்தியா எடுத்துச் செல்ல வேண்டும்.
சர்வதேச கடல் விதிகளுக்கு மாறாக மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் இலங்கை அரசு மீது சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா குற்றம் சுமத்த முடியும். ஆனால், அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏன் என்று தெரியவில்லை.
தமிழக மீனவர்களுக்கு நிரந்தரப் பாதுகாப்பு, மீன் பிடிக்கும் உரிமை கிடைக்க வேண்டுமானால் இலங்கையுடன் செய்துகொண்ட கச்சத் தீவு உடன்பாட்டை மறு ஆய்வு செய்ய வேண்டும். மீனவர் பிரச்சனையில் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் திமுக நேர்மையுடன் நடந்துகொள்ளவில்லை.
தொலைக்காட்சி நிருபர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் மன்மோகன் சிங், கூட்டணி தர்மத்துக்காக சில விஷயங்களில் சமரசம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது என்றும், 2ஜி ஸ்பெக்ட்பம் ஒதுக்கீட்டில் தனக்கு எதுமே தெரியாது என்றும் கூறியிருப்பது ஊழலை நியாயப்படுத்துவது போன்று உள்ளது.
இந்த விஷயத்தில் அவர் மறைமுகமாக திமுகவைத்தான் கூட்டணி நிர்பந்தம் என்று குற்றம் சுமத்தியிருக்கிறார். இந்த முரண்பாடுகளுடன் திமுகவும், காங்கிரசும் சட்டப் பேரவைத் தேர்தலை எப்படி ஒற்றுமையாக எதிர்கொள்ள முடியும்? என்றார் ராஜா.