ஸ்பெக்ட்ரம்: ராசா அப்ரூவர் ஆக வேண்டும்- அருண் ஷோரி
டெல்லி: தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது தான், தொலைத் தொடர்பு ஆணையத்தின் பரிந்துரையே இல்லாமல், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான சில புதிய விதிமுறைகள் அமலாக்கப்பட்டன என்று முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அருண் ஷோரி கூறியுள்ளார்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறையாக ஏலம் விடுவதற்குப் பதிலாக, முதலில் வருபவர்களுக்கு முதலில் என்ற கொள்கையே பாஜக ஆட்சியில் தான் அமலாக்கப்பட்டது. அதையே தான் நானும் பின்பற்றினேன் என்று முன்னாள் அமைச்சர் ராசா கூறியுள்ளார்.
இதையடுத்து கடந்த 2001ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை நடைபெற்ற ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியில் தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த அருண் ஷோரியிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்தது. இவர் 2003 ஜனவரி முதல் 2004ம் ஆண்டு வரை அந்தத்துறையின் பொறுப்பை வகித்தார்.
இவரது பதவிக் காலத்தில் முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை கொள்கை அடிப்படையில் ஏறத்தாழ 50 ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்கள் வழங்கப்பட்டதாகவும், அதன்மூலம் பார்தி, வோடாபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் பயன் அடைந்ததாகவும் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
இந் நிலையி்ல் அருண் ஷோரி நேற்று சிபிஐ முன் ஆஜரானார். அவரிடம் 3 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின் நிருபர்களிடம் ஷோரி பேசுகையில்,
நடந்த ஊழலை மறைக்கவே முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற கொள்கையைப் பற்றி பேசி வருகின்றனர். அலைக்கற்றை ஒதுக்கீட்டில் உண்மையான விவகாரம் ஊழல்தான். என்ன கொள்கை கடைப்பிடிக்கப்பட்டது என்பது அல்ல.
எனக்குத் தெரிந்த விவரங்களை திரட்டி 50 பக்க ஆவணமாக சிபிஐயிடம் சமர்ப்பித்துள்ளேன். அதில் பாஜக ஆட்சி காலத்தில் முதலில் வருபவருக்கே முன்னுரிமை கொள்கை எந்த அடிப்படையில் பின்பற்றப்பட்டது என்பதை விளக்கியுள்ளேன்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மூலம் ராசா பெருமளவில் பணம் சம்பாதித்துள்ளார். அதனால் தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ராசா அப்ரூவர் ஆகி ஊழலில் யார், யார் பயனடைந்தார்கள் என்ற விவரத்தை அம்பலப்படுத்த வேண்டும்.
சிபிஐ அலுவலகத்துக்கு தொழிலதிபர்கள் விசாரணைக்காக வருவதை ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டு வருகின்றன. ஆனால் இந்தப் பட்டியலில் பிரதமர் பெயர் இல்லை. தமிழக முதல்வர் கருணாநிதியின் பெயர் இல்லை. பிற காங்கிரஸ் தலைவர்களின் பெயர்களும் இதில் விடுபட்டு போயுள்ளது.
சிபிஐயிடம் தயாநிதி மாறன் காலத்தில் நடந்த முறைகேடுகளை அதிகாரிகளிடம் விளக்கிக் கூறியுள்ளேன். தவறு செய்த ராசா சிறையில் உள்ளார். ஆனால் மாறன் மட்டும் இன்னும் அமைச்சராக உள்ளார்.
இந்த விசாரணக்கு என்னால் முடிந்தளவு சிபிஐ அமைப்புக்கு உதவுவேன். மீண்டும் விசாரணைக்கு வரச் சொன்னால் வருவேன் என்றார் ஷோரி.