மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும் : ஜான்பாண்டியன்
மதுரை: மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் அரசியல் விழிப்புணர்வு மாநில மாநாடு மதுரை, விரகனூர் ரிங் ரோட்டில் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் பேசியதாவது,
வரும் சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் அறிவிப்பேன். நமது சமுதாய மக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.
தேவேந்திர குலத்தினரை ஆதிதிராவிடர்கள் என்று கூறாமல் பட்டியலின மக்கள் என்று அழைக்க வேண்டும்.
மதுரை விமான நிலையத்தின் விரிவாக்கத்திற்கு தேவேந்திர குல மக்கள் தான் அதிக அளவில் நிலத்தினை வழங்கியுள்ளனர். எனவே, விமான நிலையத்திற்கு தியாகி இமானுவேல் சேகரனார் பெயரை சூட்டுவதுடன், அவரது நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்.
பட்டியலின மக்களுக்கு அனைத்து நிலை பதவி உயர்விலும் இட ஒதுக்கீட்டினை முழுமையாக அமல்படுத்த வேண்டும். அத்துடன் தனியார் துறையிலும் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். பட்டியலின கிறிஸ்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க அரசு முன் வர வேண்டும்.
தமிழக கடலில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் சுமார் 500 -க்கும் மேற்பட்டவர்களை இலங்கை கடற்படை படுகொலை செய்துள்ளது. எனவே, மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications