வரி குறைக்கப்படவில்லை... மானியமும் இல்லை: பெட்ரோல் -டீஸல் விலை உயர வாய்ப்பு?
டெல்லி: 2011-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் எண்ணெய்க்கான வரிகளும் குறைக்கப்படவில்லை, அதற்கான மானியமும் உயர்த்தப்படவில்லை. எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் அபாயம் எழுந்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 117 டாலராக உயர்ந்துள்ளது.
இதனால், எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோலுக்கு லிட்டருக்கு 2 ரூபாய் 25 காசுகளும், டீசலுக்கு லிட்டருக்கு ரூ.10 ரூபாய் 74 காசுகளும், மண் எண்ணெய்க்கு லிட்டருக்கு 21 ரூபாய் 60 காசுகளும், கியாசுக்கு சிலிண்டருக்கு 356 ரூபாயும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. நடப்பு நிதியாண்டில், மொத்தம் ரூ.76 ஆயிரத்து 559 கோடி நஷ்டம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தாமல், இந்த நஷ்டத்தை சரிக்கட்ட வேண்டுமானால், அப்பொருட்கள் மீதான சுங்க வரி மற்றும் உற்பத்தி வரி குறைக்கப்பட வேண்டும் என்று பெட்ரோலிய அமைச்சகம் பரிந்துரைத்தது. தற்போது, கச்சா எண்ணெய் மீது 5 சதவீத சுங்க வரியும், பெட்ரோல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு 14 ரூபாய் 35 காசுகளும், டீசலுக்கான உற்பத்தி வரி 4 ரூபாய் 60 காசுகளும் விதிக்கப்பட்டு வருகிறது.
பாராளுமன்றத்தில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்த வரிகளை குறைப்பது பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
இதனால், பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், தற்போது பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருப்பதால், இப்போது விலையைக் கூட்டினால், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் அமளியை சந்திக்க வேண்டி இருக்கும்.
பட்ஜெட் கூட்டத்தொடர், வருகிற 18-ந் தேதி முதல், 4 வாரங்களுக்கு இடைவெளி விடப்பட்டு, மீண்டும் கூடுகிறது. எனவே, அந்த இடைவெளியில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் என்று தெரிகிறது. அல்லது தேர்தலுக்குப் பிறகு கண்டிப்பாக உயரும் என்கிறார்கள்.
இந்த விலை உயர்வு குறித்து, பொது பட்ஜெட்டுக்கு பிறகு, பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சர்கள் குழு (GoM) முடிவு எடுக்கும் என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி ஏற்கனவே கூறியுள்ளார். இந்தக் குழு 18-ந் தேதிக்கு பிறகு கூடி, பெட்ரோல் - டீசல் விலையை உயர்த்துவது பற்றி முடிவு எடுக்கும் என்று தெரிகிறது.