லிபியாவில் 3 ஹாலந்து நாட்டு கடற்படையினர் சிறை பிடிக்கப்பட்டனர்
தி ஹேக்: லிபியாவில் ஹாலந்து நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை வீரர்களை ஆயுதம் தாங்கிய சிலர் சிறை பிடித்துச்சென்றிருப்பதாக ஹாலந்து நாடு தெரிவித்துள்ளது.
லிபியாவிலிருந்து தத்தமது நாட்டு மக்களை ஒவ்வொரு நாடும் பல்வேறு வழிகளில் மீட்டுக் கொண்டிருக்கின்றன. அதன்படி ஹாலந்து நாடும் தனது மக்களை அங்கிருந்து மீட்டு வருகிறது. இதற்காக தனது நாட்டு ராணுவ வீரர்களையும் அது மீட்புக் குழுவினருடன் அனுப்பி வைத்துள்ளது.
இந்த நிலையில் 3 ஹாலந்து கடற்படை வீரர்களை ஆயுதம் தாங்கிய குழு ஒன்று துப்பாக்கி முனையில் பிடித்துச் சென்று விட்டதாக ஹாலந்து கூறியுள்ளது.
இதுகுறித்து ஹாலந்து நாட்டு கடற்படை அதிகாரி ஒருவர் கூறுகையில், 3 வீரர்கள் பிடிபட்டிருப்பது உண்மைதான். இவர்கள் மூவரும் கடற்படையைச் சேர்ந்தவர்கள். இவர்களை அதிபர் கடாபியின் விசுவாசத்திற்கு ஆட்கள்தான் பிடித்துச் சென்றிருப்பதாக அறிகிறோம். சிர்டி என்ற இடத்திலிருந்து இந்த மூன்று வீரரும் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.
சிர்டி பகுதியில் சிக்கியிருந்த ஹாலந்து மற்றும் ஐரோப்பிய நாட்டவர்களை மீட்க அங்கு ஹெலிகாப்டரில் இந்த மூன்று வீரர்களும் சென்றிருந்தனர். அப்போது அங்கு வந்த அந்த ஆயுதம் தாங்கிய நபர்கள் ஹெலிகாப்டரிலிருந்து இறங்கிய ஹாலந்து வீரர்களை தாக்கினர். பின்னர் சிறை பிடித்துச் சென்று விட்டனர்.
மூன்று பேரையும் பத்திரமாக மீட்க தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளோம் என்றார்.