அதிமுக, தேமுதிகவுடனும் பேசியதே காங்.கை திமுக கைவிட காரணம்?
சென்னை: திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேசிய அதே வேளையில், அதிமுகவுடனும், தேமுதிகவுடனும் காங்கிரஸ் தரப்பில் தீவிர பேரம் நடத்தப்பட்டதே, திமுகவின் எரிச்சலுக்கும், அமைச்சரவையிலிருந்து விலகும் முடிவை எடுக்கவும் காரணம் என்று கூறப்படுகிறது.
இதுவரை இல்லாத அளவு காங்கிரஸ் இத்தனை பிடிவாதமாகவும், வீராப்பாகவும் நடந்து கொள்ள என்ன காரணம் என்பதே தற்போது அனைவரின் குழப்பமும், ஆச்சரியமுமாக உள்ளது.
இதுவரை திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டபோதெல்லாம் இவ்வளவு பிடிவாதமாக பேரம் பேசியதில்லை காங்கிரஸ். கூட்டணித் தலைமையிடம் இத்தனை தொகுதிகள் வேண்டும் என்று காங்கிரஸ் கேட்கும், கூட்டணித் தலைமை இவ்வளவுதான் தர முடியம் என்று கூறும். பின்னர் இரு தரப்பும் நீக்குப் போக்குடன் நடந்து கொண்டு ஒரு உடன்பாட்டை எட்டுவார்கள். இதுதான் இத்தனை காலமும் நடந்தது.
ஆனால் இந்த முறை வரலாறு காணாத வகையில் எத்தகைய சமரசத்திற்கும் உடன்படாமல் இழுத்தடித்துக் கொண்டே போனது காங்கிரஸ். இதுதான் ஏன் என்று பலருக்கும் புரியவில்லை.
ஆனால் இதற்குப் பின்னணியில் காங்கிரஸ் கட்சி ஆடிய டபுள் கேம் இருந்தது தற்போது தெரிய வந்துள்ளது.
அதாவது திமுகவுடன் பேசிக் கொண்டே மறுபக்கம் அதிமுக, தேமுதிகவுடனும் கூட்டணி தொடர்பாக பேசியுள்ளது காங்கிரஸ். அதிமுக ஆதரவு காங்கிரஸ் தலைவர்கள் மூலம் அக்கட்சியுடனும், விஜயகாந்த்துக்கு நெருக்கமானவர்கள் மூலமாக தேமுதிகவுடனும் பேசி வந்துள்ளது காங்கிரஸ் என்கிறார்கள்.
இதனால்தான் திமுகவுடன் உடன்பாடு ஏற்படுவதை வேண்டும் என்றே தாமதப்படுத்தி வந்ததாம் காங்கிரஸ்.
பிப்ரவரி 10 மற்றும் 12 ஆகிய தேதிகளில் டெல்லியில் வைத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் நெருங்கிய உறவினர் ஒருவர், மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவரை சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிடலாம் என்று பேசப்பட்டுள்ளது. ஆனால் தொகுதிகளைப் பங்கிட்டுக் கொள்வதில் இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லையாம். இதைத் தொடர்ந்தே தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்தது.
இதே நிலைதான் காங்கிரஸ், அதிமுக பேச்சுவார்த்தையிலும் ஏற்பட்டதாம். இந்த ரகசிய பேரம் காரணமாகவே திமுகவை லூஸில் விட்டுள்ளது காங்கிரஸ். ஆனால் இது திமுகவுக்குத் தெரிந்திருந்தாலும் கூட பொறுமை காத்து வந்தது. ஆனால் பொறுமைக்கும் எல்லை உண்டு என்பது போல காங்கிரஸாரின் இந்த டபுள் கேம் நீண்டு கொண்டே போவதைப் பார்த்து டென்ஷனாகித்தான் அமைச்சரவையிலிருந்து விலகுகிறோம் என்று கூறியது காங்கிரஸ் என்கிறார்கள்.
எங்கு அதிகம் கிடைக்கிறதோ அங்கு போகலாம் என்ற நினைப்பில் இருந்து வந்த காங்கிரஸுக்கு இப்போது எங்கு போவது என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.