மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக விலகுவது நல்லதுதான்-நெப்போலியன்
விளாத்திகுளம்: மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுவது என்ற திமுகவின் முடிவு நல்லதுதான் என்று நடிகரும், மத்திய இணை அமைச்சருமான நெப்போலியன் தெரிவித்துள்ளார்.
விளாத்திகுளத்தில் திமுக துணை தலைவர் முக ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொது கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் பெரியசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் மத்திய அமைச்சர் நெப்போலியன் கலந்து கொண்டு பேசியதாவது,
திமுக ஆட்சியில் ஆளும் கட்சி, எதிர்கட்சி என்ற பகுபாடின்றி அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விஜயகாந்த் முதல்வராக ஆசைப்படுகிறார். அவரால் அவரது கல்லூரிக்கு கூட முதல்வராக ஆக முடியாது.
நடிகர் சங்க தலைவராக விஜயகாந்த் இருந்தபோது நான் துணை தலைவராக இருந்தேன். அப்போது விஜயகாந்துக்கு அரசியல் என்றால் என்ன தெரியாது. படவாய்ப்பு குறைந்ததால் அரசியலுக்கு வந்து விட்டார்.
நான் 16 வயதிலேயே அரசியலில் நுழைந்து விட்டேன். ஜெயலலிதா என்னை விட அரசியலில் இளையவர். நடிகர்கள் அரசியலுக்கு வந்த உடனே முதல்வர் ஆகி விட வேண்டும் என்று எண்ணுகிறார்கள். முதலில் கவுன்சிலர், எம்எல்ஏ என்ற பதவிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று அதன்பிறகு முதல்வர் பதவிக்கு ஆசைப்பட வேண்டும்.
43 வருடம் ஆட்சியை பிடிக்க முடியாத காங்கிரஸ் இப்போது முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு கூட்டணியில் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. தி்முகவில் இருந்து காங்கிரஸ் விலகியது நல்லதுதான். நான் இப்போதே ராஜினமா கடிதத்தை எழுதி வைத்து விட்டேன். அமைச்சர் பதவியை விட திமுக தொண்டனாக இருக்கவே விரும்புகிறேன் என்றார் அவர்.