சட்டசபை தேர்தல் : உபியில் இருந்து 6 ஆயிரம் ஓட்டுப் பதிவு எந்திரங்கள் வந்தன
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்காக உத்தர பிரதேசத்தில் இருந்து 6 ஆயிரம் ஓட்டுப் பதிவு எந்திரங்கள் சென்னை வந்துள்ளன.
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 13-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதற்காக பிற மாநிலங்களில் இருந்து மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரங்கள் வரவழைக்கப்படுகின்றன. முதல் கட்டமாக உத்தர பிரதேசத்தில் இருந்து 6 ஆயிரம் ஓட்டுப் பதிவு எந்திரங்கள் சென்னை வந்துள்ளன. அவைகள் பரிசோதனை செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு தயாராக உள்ளன. தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இது பற்றிக் கூறுகையில் உத்தரபிரதேசத்தில் இருந்து வந்துள்ள எந்திரங்கள் புதிய அம்சங்கள் கொண்டுள்ளது. அவைகள் வாக்குப் பதிவில் ஏற்படும் முறைகேடுகளை எளிதில் கண்டுபிடிக்கும் தன்மை வாய்ந்தது என்று தெரிவித்தனர்.
புதிய மின்னணு வாக்குப் பதிவு எந்திரம் புது வகை கணக்குளை காட்டும். ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தில் எத்தனை எண்ணிக்கையிலான வாக்குகள் பதிவாகியுள்ளன, ஒவ்வொரு வாக்குச் செலுத்துதலுக்கும் உள்ள கால இடைவெளி என்ன என்பதையும் மிகத் துல்லியமாகத் தெரிவிக்க கூடியது.
இது பற்றி அதிகாரி ஒருவர் கூறியதாவது,
இன்னும் 3 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வரவுள்ளன. ஆசிரியர்களை அரசுத் தேர்வுப் பணிகளில் தான் முழுமையாக ஈடுபடுத்த வேண்டும் என்றும், அவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கான தேர்தல் களப்பணிப் பயிற்சி வரும் 20-ம் தேதி துவங்குகிறது. தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய அரசு எந்திரம் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு 3 ஆயிரத்து 225 வாக்குச்சாவடிகளில் 20 ஆயிரம் தேர்தல் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப் பட உள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரைச் சேர்க்கக் கோரி சென்னையில் புதிதாக 40 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. ஏற்கனவே 30 லட்சம் வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2009-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 3 ஆயிரத்து 772 வாக்குச்சாவடிகள் இருந்தது. அது தற்போது 3 ஆயிரத்து 225 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது என்றார்.