இன்று வேட்பு மனு தாக்கல் தொடக்கம்-26ம் தேதி கடைசி நாள்
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. அதேபோல புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் சட்டசபைத் தேர்தல்களுக்கான வேட்பு மனு தாக்கலும் இன்று தொடங்குகிறது.
தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் ஏப்ரல்13ம் தேதி தேர்தல் நடக்கிறது.
தேர்தல்அலுவலர் அல்லது உதவி தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மணி வரை மனுக்கள் பெற்றுக் கொள்ளப்படும். நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறைதினம் என்பதால் அன்று மட்டும் மனுக்கள் பெறப்படாது.
மனு தாக்கல் செய்ய 26ம் தேதி கடைசி நாள். 28ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். தகுதி இல்லாத மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும்.
மனுக்களை வாபஸ் பெறுவதற்கு 30ம் தேதி கடைசி நாளாகும். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 13ம் தேதி ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படும்.
மே 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும். அன்று பிற்பகலிலேயே முடிவுகள் தெரிந்துவிடும்.
இந் நிலையில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் நிருபர்களிடம் பேசுகையில்,
வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகம் இருக்கும் இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்குள் வேட்பாளருடன் 4 பேரும், 3 வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும். சுயேச்சை வேட்பாளர்களுடன், அவர்கள் போட்டியிடும் தொகுதியை சேர்ந்த 10 பேர் அனுமதிக்கப்படுவார்கள்.
சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வெளிமாநிலங்களில் இருந்து தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 2 தொகுதிகளை ஒரு பொதுபார்வையாளரும், 4 தொகுதிகளை ஒரு செலவு கணக்கு பார்வையாளரும் கவனிப்பார்கள்.
வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்காக ஜனவரி மாதம் 10ம் தேதியில் இருந்து, இந்த மாதம் 16ம் தேதி வரை 1 லட்சத்து 6 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். புதிதாக விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு, விண்ணப்பித்த நாளில் இருந்து 5 நாட்களுக்குள் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு விடும்.
இதுவரை நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில், வீடுவீடாக சென்று பூத் சிலிப்பை கட்சி நிர்வாகிகளே வழங்கி வந்தனர். ஆனால், இந்த முறை அந்த பணியை தேர்தல் ஆணையமே மேற்கொள்கிறது. ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் போட்டோவுடன் கூடிய பூத் சிலிப்பை வாக்குச்சாவடி அலுவலர்களே வீடுவீடாக சென்று வழங்குவார்கள்.
வாக்காளர்களுக்கு வழிகாட்டுவதற்குத்தான் போட்டோவுடன் கூடிய பூத் சிலிப் வழங்கப்படுகிறது. பூத் சிலிப் இல்லாதவர்களும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.
வேட்பு மனு தாக்கல் மற்றும் பிரசாரம் தொடர்பாக ஏராளமான கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. அதன்படி, வேட்பு மனு தாக்கல் செய்ய ஊர்வலமாக வரக்கூடாது. மனு தாக்கல் செய்யும் அறையில் வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சுயேட்சை வேட்பாளர் என்றால் பெயரை முன்மொழிய 10 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வேட்பு மனு தாக்கலின்போது வேட்பாளரின் கல்வித்தகுதி, சொத்து விவரம், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.
பொதுக் கூட்டங்களுக்கு தற்காலிக மின் இணைப்பு:
இந் நிலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழக கூடுதல் டி.ஜி.பி (விஜிலென்ஸ்) ஆஷீஸ் பெங்ரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்ஸ
பொதுக் கூட்டங்கள் நடத்த விரும்புவோர் மின்சார வாரியத்திடம் முறையான தற்காலிக மின் இணைப்பு பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்காக அந்தந்த பகுதிக்கு உட்பட்ட உதவி செயற் பொறியாளரை அணுகி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.
இந்த நடைமுறையை விரைவாக முடிக்குமாறு அனைத்து உதவி செயற் பொறியாளர்களும் அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள். மின்சார வாரியத்தின் இந்த நடைமுறையை பின்பற்றாமல் தன்னிச்சையாக தவறான வழிகளில் மின்சாரத்தை பயன்படுத்துவதை தவிர்த்துவிடுமாறு பொதுக் கூட்டங்களை நடத்த விரும்புவோர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.