சட்டசபை தேர்தல்: குமரியி்ல் நேற்று 4 பேர் வேட்பு மனு தாக்கல்
நாகர்கோவில்: சட்டசபை தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் துவங்கிய முதல்நாளான நேற்று குமரியி்ல் 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
வருகிற ஏப்ரல் 13-ம் தேதி சட்டசபை தேர்தலை நடப்பதை முன்னிட்டு தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று துவங்கியது.
குமரி மாவட்டத்தில் 5 சட்டசபை தொகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பத்மநாபபுரம் தொகுதிக்கு பத்நாபபுரம் ஆர்டிஓ அலுவலகதத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.
வேட்பு மனு தாக்கலின் முதல் நாளான நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் 3 வேட்பாளர்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்தனர். பவுர்ணமி நாளான நேற்று இந்து மக்கள் கட்சி, சிவசேனா போன்ற கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.
கிள்ளியூர் தொகுதியில் போட்டியிட சிபிஐஎம்எஸ் சார்பில் இலவிளையைச் சேர்ந்த பால்ராஜ் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதேபோல் விளவங்கோடு தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட ராதாகிருஷ்ணன் என்பவர் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ரங்கநாதனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ஜோதிடரான இவர் 1996-ம் ஆண்டு 4880 ஓட்டுகளும், 2001-ம் ஆண்டில் விளவங்கோடு தொகுதியில் 7281 ஓட்டுகளும் பெற்றிருந்தார். நாகர்கோவில் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட நாகூர்மீரான் பீர் முகமது என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். கிருஷ்ண கோயிலைச் சேர்ந்த இவர் தேர்தலில் போட்டியிடுவது இது 44 வது முறையாகும். ஒருநாள் எம்எல்ஏ ஆகி மக்களுக்கு சேவை செய்வேன் என்றார் அவர்.