சட்டசபை தேர்தல்: ராதாபுரம் தொகுதியி்ல் அப்பாவு சுயேட்சையாக போட்டி?
பணகுடி: சிட்டிங் தொகுதியான ராதாபுரத்தை கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு விட்டு கொடுத்ததால் திமுகவினர் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில், அத்தொகுதி எம்எல்ஏ அப்பாவு சுயேட்சையாக போட்டியிட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ராதாபுரம் தொகுதி காங்கிரஸ் கோட்டை என்ற வரலாறு உண்டு. கடந்த 2001-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அப்பாவு சுயேட்சையாக போட்டியிட்டு வென்று அந்த பெயரை மாற்றி அத்தேர்தலில் தமிழகத்திலேயே வெற்றி பெற்ற ஓரே சுயேட்சை எம்எல்ஏ என்ற அந்தஸ்தை பெற்றார்.
கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு அப்பாவு வெற்றி பெற்றதால் ராதாபுரம் தொகுதி காங்கிரஸ் கோட்டை என்பதில் மாற்றம் ஏற்பட்டது.
ராதாபுரம் தொகுதியில் அப்பாவு எம்எல்ஏவின் நிதி ஒதுக்கீடு மற்றும் அவரது பரிந்துரையின் பேரில் ரூ. 872 கோடி அளவில் தொகுதியில் திட்டப்பணிகளும், மேம்பாட்டு பணிகளும் நிறைவுபெற்றுள்ளன.
ராதாபுரம் தொகுதியி்ல் தாமிரபரணி வாயிலாக பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர், மீனவர்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய், கடற்கரை கிராமங்களில் தூண்டில் வளைவு, பணகுடி மற்றும் திசையன்விலையில் மனோ கல்லூரி, பணகுடி குத்தரபஞ்சன் அருவியை சுற்றுலா தளமாக்கும் திட்டம் என பல பணிகளை மேற்கொண்டதன் விளைவாக அப்பாவுவை அவரது ஆதரவாளர்கள் சுயேட்சையாக போட்டியிட வலியுறுத்தி வருகின்றனர்.
வரும் 23-ம் தேதி அப்பாவு சுயேட்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்வதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ராதாபுரம் தொகுதியில் வழக்கத்துக்கும் மாறாக பரபரப்பு அதிகரித்துள்ளது.
கிராம பஞ்சாயத்து தலைவர்கள், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் களம் இறங்குவார் என்று தெரிகிறது.