சட்டசபை தேர்தல்: முதன்முறையாக பாளையில் களம் இறங்கும் மார்க்கிஸ்ட்
நெல்லை: வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாளையங்கோட்டை உள்பட 12 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இக்கட்சி முதன் முறையாக பாளை தொகுதியில் களம் இறங்குகிறது.
வரும் சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடுகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சி. தொகுதி பங்கீட்டில் நீ்ண்ட இழுபறிக்கு பிறகு தற்போது கட்சி வாரியாக தொகுதி உடன்பாடு ஏற்பட்டு வருகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 தொகுதிகளும், மார்க்கிஸ்ட் கட்சிக்கு 12 தொகுதிகளும் உறுதி செய்யப்பட்டு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்ற பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை உள்பட 12 தொகுதிகள் மார்க்கிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நெல்லையில் இதுவரை நடந்த சட்டசபை தேர்தலில் அம்பை, வாசுதேவநல்லூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிகண்ட மார்க்கிஸ்ட் கட்சி இத்தேர்தலில் முதன்முறையாக பாளையில் களம் இறங்குகிறது.
அதிமுக கூட்டணியில் உடன்பாடு ஏற்படும் சூழ்நிலையில் மதிமுகவுக்கு பாளை ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இதுவரை சிக்கல் தீரவில்லை.
இதற்கிடையே மனித நேய மக்கள் கட்சி பாளை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டது. ஆனால் அக்கட்சியில் கோஷ்டி பூசல் அதிகமானதால் பாளை தொகுதியை ஒதுக்காமல் ஆம்பூர், ராமநாதபுரம், சேப்பாக்கம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் அதிகம் உள்ள பாளை தொகுதியில் திமுக சார்பில் இம்முறையும் அமைச்சர் மைதீ்ன்கான் தான் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து மார்க்கிஸ்ட் கட்சியில் யாரை நிறுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு கூட்டணி கட்சியினரிடையே ஏற்பட்டுள்ளது.