'கைக்கு எட்டியது'...7 அதிமுக வேட்பாளர்கள் மாற்றம்
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அதிமுக புதிய வேட்பாளர்கள் பட்டியலில் 7 தொகுதிகளில் வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
கடந்த 16ம் தேதி 160 பேர் கொண்ட முதல் வேட்பாளரை பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டார். ஆனால், இதையடுத்து கூட்டணியில் பூகம்பம் ஏற்பட்டதையடுத்து பட்டியலைத் திருத்தி இன்று புதிய வேட்பாளர்ள் பட்டியலை வெளியிட்டார். அதில் ஏழு வேட்பாளர்களுக்கு மீண்டும் சீட் கிடைக்கவில்லை.
முதல் பட்டியலில் மைலாப்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் ஜானகி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இரண்டாவது பட்டியலில் அவருக்குப் பதில் ராஜலட்சுமி புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஸ்டாலினை எதிர்த்து சைதை துரைசாமி:
அதே போல சென்னை கொளத்தூர் தொகுதியில் சைதை துரைசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் திமுக சார்பில் போட்டியிடும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிடுகிறார். அதிமுகவின் முதல் பட்டியலில் இந்தத் தொகுதியே இடம் பெறவில்லை.
சைதை துரைசாமி பழைய அதிமுககாரர். அமைதியானவர், அடக்கமானவர், அருமையாக வேலை செய்யக் கூடியவர், தொண்டர் ஆதரவு அதிகம் கொண்டவர். இவரை சைதாப்பேட்டையில் நிறுத்தியிருந்தால் எளிதாக வென்றிருப்பார். ஆனால் கொளத்தூரில் ஸ்டாலினுக்கு எதிராக நிறுத்தியுள்ளார் ஜெயலலிதா.
மதுசூதனன் போய் வெற்றிவேல்:
அதே போல ஆர்.கே.நகர் தொகுதியில் முதலில் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இரண்டாவது பட்டியலில் அவர் பெயர் நீக்கப்பட்டு, புதிய வேட்பாளராக வெற்றிவேலை அறிவித்துள்ளார் ஜெயலலிதா.
இந்தத் தொகுதியில் அதிமுகவிலிருந்து திமுகவுக்குத் தாவிய சேகர் பாபு திமுக சார்பில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. சேகர்பாபுவின் குருதான் மதுசூதன். அது மட்டுமல்லாமல், இருவரும் உறவினர்களும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் பட்டியலில் பவானி தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த எம்.ஆர்.துரை தூக்கப்பட்டு அவருக்குப் பதிலாக பி.ஜி.நாராயணன் புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
திருவையாறு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எம்.ரங்கசாமிக்குப் பதிலாக ரத்தினசாமி வேட்பாளராக்கப்பட்டுள்ளார்.
ஜெனீபர் சந்திரனுக்குப் பதில் பால்:
தூத்துக்குடி தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெனீபர் சந்திரன் நீக்கப்பட்டு அவருக்குப் பதில் ஏ.பால் வேட்பாளராக்கப்பட்டுள்ளார்.
விராலிமலை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வி.சி.ராமையாவை மாற்றிவிட்டு சி. விஜயபாஸ்கரை வேட்பாளராக்கியுள்ளார் ஜெயலலிதா.
மதுரையில் 'மகா' குழப்பம்- பாவம், ராஜன் செல்லப்பா:
மதுரை மத்திய தொகுதியை தேமுதிகவுக்குத் தந்துவிட்டதால் அந்தத் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராஜன் செல்லாவுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. ராஜன் செல்லப்பா நீண்ட காலமாகவே அதிமுகவில் முக்கியப் பொறுப்புகளை வகிக்க முடியாமல் ஓரம் கட்டப்பட்டிருந்தவர். இப்போது கைக்குக் கிடைத்தது அவருக்கு வாய்க்கு வராமல் போய் விட்டது.
அதே போல மதுரை மேற்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கே.சாலைமுத்து தூக்கப்பட்டு அவருக்குப் பதிலாக செல்லூர் கே.ராஜு வேட்பாளராக்கப்பட்டுள்ளார். ராஜூ முதலில் மதுரை தெற்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால், தெற்கு தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தரப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.