மதிமுகவை கூட்டணியில் சேர்க்க சுமூ்கத் தீர்வை ஜெ. ஏற்படுத்த சிபிஐ கோரிக்கை
சென்னை: திமுக, காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்த மதிமுகவும், அதிமுக கூட்டணியில் இணைவது அவசியம். இதற்கான சுமூகத் தீ்ர்வை அதிமுகவும் உருவாக்கித் தர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அ.தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் இடம் பெற்று வந்த ம.தி.மு.க. தற்போது தேர்தலை புறக்கணிப்போம் என்று முடிவு எடுத்திருப்பது மிகுந்த வருத்தத்தை தருகிறது. இந்த முடிவை அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க, ம.தி.மு.க.வும் அதன் பொதுச் செயலாளர் வைகோவும் தாங்கள் எடுத்துள்ள முடிவை மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் இதற்கான சுமூகமான தீர்வை உருவாக்கித்தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று தா.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மார்க்சிஸ்ட்டும் கோரிக்கை:
இதேபோல நேற்று திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனும், மதிமுக மீண்டும் கூட்டணியில் சேர வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார்.
நேற்று அவர் வைகோவுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
வரலாறு காணாத ஊழலில் திளைத்து வரும் திமுக வும், காங்கிரசும் கூட்டணி சேர்ந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றன.
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசும், திமுக தலைமையிலான மாநில அரசும் கடைப் பிடித்து வரும் தவறான பொருளாதாரக் கொள்கையினால் விலைவாசி உயர்வு, விவசாயத்தில் சரிவு, மின்வெட்டு, தொழில் நலிவு, வேலையின்மை போன்ற பிரச்சனைகளினால் மக்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள்.
மத்திய-மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கையை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில் மதிமுகவின் பங்களிப்பு முக்கியமானது. நடக்கவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் ஊழல் கூட்டணியான திமுக-காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்துவது என்பது மக்கள் முன்னுள்ள முக்கியமான கடமையாக உள்ளது.
இத்தகைய மகத்தான போராட்டத்தில் அதிமுக தலைமையில் தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பார்வர்டு பிளாக், புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக்கழகம் உள்ளிட்ட பலகட்சிகள் அணிவகுத்து ஓரணியில் நிற்கின்றன.
திமுக-காங்கிரஸ் கூட்டணியை முறியடிப்பதில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் முக்கியமான பங்குள்ளது. இச்சூழலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் தமிழ்நாடு - புதுவை சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று எடுத்துள்ள முடிவு வேதனையளிக்கிறது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் தனது முடிவை மறுபரிசீலனை செய்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைமையிலான அணியோடு இணைந்து, ஊழலில் திளைத்து வரும் திமுக - காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்திடும் ஜனநாயகப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்ற வேண்டுமென மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற் குழு மதிமுக தலைமைக்கு வேண்டுகோள் விடுக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.