இன்றாவது வெளியாகுமா காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்?
டெல்லி: வரும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிடாமல் அகில இந்திய காங்கிரஸ் தலைமை காலம் தாழ்த்தி வருகின்றது.
வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடுகிறது. ஆனால் இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையேயான தொகுதி பங்கீடு இழுபறியாக இருந்து ஒருவகையாக சுமூகமாக முடிந்தது. அதில் காங்கிஸுக்கு 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் பாமக, விடுதலை சிறுத்தைகள் போன்ற பல்வேறு கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது.
காங்கிரசில் 2 ஆயிரத்து 500 பேர் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து தமிழக காங்கிரஸ் தேர்தல் பணிக் குழுவினர் தொகுதிக்கு 5 பேர் கொண்ட பட்டியலை தயாரித்து டெல்லிக்குகு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் இந்த பட்டியலை சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் நிராகரித்து விட்டனர்.
இந்த நிலையி்ல் காங்கிரஸ் மட்டும் வழக்கம் போல வேட்பாளர் பட்டியலைத் தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறது. இதனால் தமிழக காங்கிரஸ் கோஷ்டி தலைவர்கள் கதறி வருகின்றனர்.
ஒவ்வொரு கோஷ்டியும் தத்தமது ஆதரவாளர்களின் பட்டியலை மேலிடத்திற்கு கொடுத்துள்ளதாம். ஆனால் அதில் உள்ள பலருக்கும் சீட் கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளதாம். இதனால்தான் இந்த பரிதவிப்பாம்.
முன்னதாக 63 தொகுதிகளிலும் போட்டியிட வேட்பாளர்களின் உத்தேச பட்டியலைத் தயாரித்து அதை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு டெல்லிக்கு கொண்டு சென்றார். அதைப் பார்த்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டென்சனாகி பட்டியலையே நிராகரித்ததோடு, புதிய பட்டியல் தயாரிக்குமாறு உத்தரவிட்டார்.
அந்தப் பட்டியலில் தங்கபாலு மனைவி ஜெயந்திக்கு மைலாப்பூர் தொகுதியும், மகன் கார்த்திக்குக்கு சேலம் தொகுதியும் ஒதுக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அதே போல ஒவ்வொரு கோஷ்டியும் தனக்கு வேண்டிய தொகுதியை வாங்கி, அதில் தங்களுக்கு வேண்டியவர்களை வேட்பாளராகப் போட்டிருந்தனர்.
மேலும் காங்கிரஸ் கட்சிக்கே சம்பந்தமில்லா, கோஷ்டி தலைவர்களுக்கு வேண்டிய சில பெரும் புள்ளிகளின் பெயர்களும் அதில் இடம் பெற்றிருந்தது. இதனால் தான் அதை சோனியா நிராகரித்தாராம்.
இந் நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பிக்கள் மாணிக் தாகூர், ஆரூண், கிருஷ்ணசாமி, ராமசுப்பு, அழகிரி, விசுவநாதன் ஆகியோர் சோனியாவை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தன்னிச்சையாக பட்டியல் தயாரித்துள்ளார். தனக்கு வேண்டியவர்கள் பெயர்களை பட்டியலில் சேர்த்துள்ளார். கட்சிக்காக பாடுபட்டவர்களும், வெற்றி வாய்ப்பு உள்ளவர்களும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். எனவே சோனியா தீவிரமாக பரிசீலித்து தகுதியான வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
அதாவது இவர்களது ஆதரவாளர்களுக்கு பட்டியலில் இடம் தரப்படவில்லை என்பது தான் இதன் சாரம்சம்.
இந் நிலையில் புதிய பட்டியல் தயார் செய்யப்பட்டு சோனியா வசம் தரப்பட்டுள்ளது. இதற்கு சோனியாவின் ஒப்புதல் கிடைத்ததும் இன்று இரவு வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என்று தெரிகிறது.
வேட்பு மனுத் தாக்கல் முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ளதால், பெரும் டென்ஷனில் உள்ளனர் கோஷ்டித் தலைவர்கள்.