புதுவையில் ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் தனித்துப் போட்டி
புதுச்சேரி: புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸும், அதிமுகவும் இணைந்து போட்டியிடும் வாய்ப்பு முறிந்து போய் விட்டது. தனது அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் என முன்னாள் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுவையில் என்.ஆர். காங்கிரஸுடன் உடன்பாடு வைத்துக் கொள்வது குறித்து அதிமுக தரப்பில் பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் கூட்டணியில் பெரும் குழப்பம் ஏற்பட்டு விட்டதால் புதுச்சேரி விவகாரத்தில் ஜெயலலிதா ஆர்வம் காட்டவில்லை.
அதேசமயம், தமிழக வேட்பாளர் திருத்தப் பட்டியலை அறிவித்த ஜெயலலிதா கூடவே புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். இதனால் புதுச்சேரியில் அதிமுக தனித்துப் போட்டியிடுவதாக செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து ஜெயலலிதா பின்னர் விளக்குகையில் தொடர்ந்து ரங்கசாமியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், உடன்பாடு ஏற்பட்டால் அதிமுக வேட்பாளர்கள் சிலர் விலகுவர் என்றும் தெரிவித்திருந்தார்.
அதன்படி ரங்கசாமியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து இன்று தனது கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தார் ரங்கசாமி. கூடவே 28 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார். ரங்கசாமி இந்திரா நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
மாகே, ஏனாம் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மட்டும் ரங்கசாமி அறிவிக்கவில்லை.
அதிமுக கூட்டணியைப் போலவே, திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகளும், புதுச்சேரியில் தனித்துப் போட்டியிடுவது நினைவிருக்கலாம்.