ஹிட்லரை விட குரேஷி மோசம்: பிரதீபா பாட்டீலிடம் திமுக நிர்வாகி புகார்
நெல்லை: ஹிட்லரின் நடவடிக்கைகளை விட புதிய தலைமை தேர்தல் ஆணையரின் நடவடிக்கைகள் மோசமாக இருக்கின்றன என்று குடியரசுத் தலைவருக்கு பாளை மண்டல தலைவர் திமுகவை சேர்ந்த சுபா சீதாராமன் புகார் அனுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
இந்திய குடியரசுத் தலைவராகிய உங்களுக்கு குடிமக்களின் உரிமையை பாதுகாக்கும் பொறுப்பு அரசியல் சட்டம் மற்றும் பாராளுமன்றம் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனநாயகத்தை தேர்தல் மூலம் உறுதி செய்ய தேர்தல் ஆணையம் வழிவகை செய்கிறது. ஆனால் தமிழகத்தில் தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையம் நடைமுறைக்கு ஒவ்வாத நிபந்தனைகளை விதிக்கிறது. போக்குவரத்து சாலைகளில் போலீஸ் அடிக்கடி சோதனைச் சாவடிகளை அமைத்து பயணிகளை கடுமையாக சோதிக்கின்றனர்.
கோயில், குடும்ப விழாக்களுக்கு சென்று வருவோரும் சோதனை என்ற பெயரில் தொல்லைக்கு ஆளாகின்றனர். அன்றாடம் பயன்படும் பால், உணவு பொருட்கள் மற்றும் ஜவுளிகளும், வணிகத்துக்கு கொண்டு செல்லும் பணமும் பறிமுதல் செய்யப்படுகிறது. கோழி, ஆடு மாடுகளையும் கூட விட்டு வைக்கவில்லை. அவற்றையும் தேர்தல் அதிகாரிகள் அடை காக்கின்றனர்.
தனியார் வீடுகள், கட்டிடங்களில் போலீஸ் உதவியுடன் தேர்தல் அதிகாரிகள் இரவு நேரங்களில் சோதனை என்ற பெயரில் அத்துமீறி செயல்படுகின்றனர். சாலையோர நினைவிடங்கள், கொடி கம்பங்கள் வெட்டிச் சாய்க்கப்படுகின்றன. திருமண மண்டங்களில் பொதுமக்களின் மங்கல நிகழ்ச்சிக்கு கூட மறுக்கப்படுகின்றன.
புதிய தலைமை தேர்தல் ஆணையரின் செயல்பாடு ஹி்ட்லரின் செயல்பாடை விட மோசமாக உள்ளது. எனவே குடியரசுத் தலைவராகிய நீங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஜனநாயக விரோதமாக செயல்படும் மத்திய தேர்தல் ஆணையத்தை நேரில் ஆஜராக சொல்லி மனித உரிமை மீறல்களை கைவிட்டு அரசியல் சாசனம் வழங்கிய வரம்பிற்கு உட்பட்டு தேர்தலை நடத்த அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications