பார்வையற்றவர்களுக்கு பிரெய்லி வாக்குச்சீட்டு: தேர்தல் அலுவலர் தகவல்
கரூர்: பார்வையற்றவர்களுக்கு பிரெய்லி முறையில் வாக்குச்சீட்டு அச்சடிக்கப்படும் என்று கரூர் மாவட்டத் தேர்தல் அலுவலர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
கரூர் சட்டசபை தொகுதியில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தைக் கையாளுதல் மற்றும் வாக்குப்பதிவு நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த பயிற்சி வகுப்பு தாந்தோன்றிமலையில் உள்ள அரசுக் கல்லூரியில் நடைபெற்றது.
இப்பயிற்சி முகாமைப் பார்வையிட்ட பின்பு கரூர் மாவட்டத் தேர்தல் அலுவலர் உமா மகேஸ்வரி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தற்போது நடைபெறும் தேர்தல் பணி மிக முக்கியமானதாகும். ஜனநாயகத்திற்காகச் செய்யும் பணி. ஜனநாயகக் கடமைகளில் இதுவும் ஒன்றாகும். இங்கு கூறப்படுபவற்றை நன்கு புரிந்து, மனதில் ஏற்றிக் கொள்ளுங்கள்.
தேர்தல் நாளன்று வழங்கப்படும் படிவங்களை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். வாக்குப்பதிவை 2 மணி நேரத்திற்கு ஒருமுறை அதற்கான படிவ அட்டையில் பதிவு செய்திருக்க வேண்டும்.
வாக்குச்சாவடிகளில் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். 10 வாக்குச்சாவடிகளுக்கு ஒரு மண்டல அலுவலர் வாக்குச்சாவடி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பார்வையற்றவர்களுக்கு பிரெய்லி முறையில் வாக்குச்சீட்டு அச்சடிக்கப்படும். பிரெய்லி முறை தெரியாதவர்களுக்கு உதவியாக ஒருவரை மட்டும் உடன் அழைத்து வரலாம். முதியவர்களுக்கு என்று தனி வரிசை அமைக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications