வேட்பாளர்களிடம் சீட்டுக்கு பணம் வாங்கவில்லை: தா.பாண்டியன்
சென்னை: வேட்பாளர்களை தேர்வு செய்ய பணம் வாங்கவில்லை, அந்தப் பழக்கமும் இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
தேர்தலில் சீட் கிடைக்காததால் முன்னாள் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் நாகராஜரெட்டி அபாண்டமாக புகார் கூறுகிறார். வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கென்று விதிமுறைகள் வைத்துள்ளோம். அதன்படி தான் தேர்வு செய்கிறோம்.
எம்.எல்.ஏ. ராமச்சந்திரனிடம் ரூ. 50 லட்சம் வாங்கிக் கொண்டு தான் சீட் கொடுத்ததாக ரெட்டி கூறியுள்ளார். அது மட்டுமின்றி கம்யூனிஸ்டுகள் 10 தொகுதிகளில் தலா ரூ. 50 லட்சம் வாங்கி்க் கொண்டு சீட் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
இந்த செய்தி தனியார் தொலைக்காட்சி ஒன்றிலும் வெளியாகியுள்ளது. தவறான செய்திக்கு மறுப்பு தெரிவிக்குமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை வரவேற்கிறோம். ஆனால் அவர்களையும் மீறி சில தவறான சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மதுபாட்டில்கள் ஏற்றி வந்த 2 லாரிகளை பொது மக்களே மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தற்போது போலீஸ் வாகனத்திலேயே பணம் கடத்தப்படுவதாக தகவல் வருகிறது. இதை குறித்து தேர்தல் ஆணையம் விசாரித்து தவறு செய்யும் போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரு கட்சிகள் இலவசங்களை தருவதாகத் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளன. இதெல்லாம் மக்கள் வரிப்பணத்தில் வாங்கப்பட்டு அவர்களுக்கே கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதுவரை திமுக அரசு ரூ. 1 லட்சத்து 1092 கோடி கடன் வாங்கியுள்ளது. இதற்கு ஆண்டுதோறும் வட்டி மட்டுமே ரூ.16 ஆயிரத்து 800 கோடி கட்ட வேண்டும். எனவே, இலவசங்களை வரவேற்க வேண்டியதில்லை. இலவசங்களை கொடுக்காமலேயே இருந்திருக்கலாம்.
அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதிமுக தலைமையில் புதிய ஆட்சி அமைவது உறுதி. கூட்டணி ஆட்சியில் இடம் பெற வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை என்றார்.
ஜெ.வுடன் ஏன் பிரசாரம் செய்யவில்லை?
கால அவகாசமில்லாததால் கூட்டுப் பிரசாரம் செய்ய முடியவில்லை என்று தா.பாண்டியன் கூறினார்.