அன்னா ஹஸாரேவுக்கு இந்திய தொழில்துறை முழு ஆதரவு!!
டெல்லி: அன்னா ஹஸாரே தொடங்கியுள்ள ஊழலுக்கு எதிரான போராட்டம், இந்தியத் தொழில் துறைக்கு ஆரோக்கியமான போக்கைத் தரும். அவரை ஆதரிக்கிறோம், என இந்தியாவின் ஒட்டு மொத்தத் தொழில் துறையும் குரல் கொடுத்துள்ளது.
ஊழலுக்கு எதிரான சத்யாகிரகப் போரை அறிவித்துள்ளார் பிரபல சமூக சேவகர் அன்னா ஹஸாரே. காந்திய வழியில் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அவருக்கு நடிகர்கள், ஆன்மீகவாதிகள், சமூக ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரும் ஆதரவளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஊழலும் முறைகேடுகளும் மலிந்து கிடக்கும் இந்தியத் தொழில் துறை, ஹஸாரேவுக்கு முழு ஆதரவைக் கொடுத்துள்ளது.
பஜாஜ் குழுமம், கோத்ரெஜ் குழுமம் என நாட்டின் முன்னணி நிறுவனங்கள் வெளிப்படையாகவே ஆதரவு காட்டியுள்ளன. இதைவிட முக்கியம் 'ஃபிக்கி' எனும் இந்தியத் தொழில் வர்த்தகக் கூட்டமைப்பு, அன்னா ஹஸாரேவின் உண்ணாவிரதத்தை பகிரங்கமாக ஆதரித்துள்ளது.
இந்தியத் தொழில் துறையின் பிரதிநிதியாகத் திகழ்வது இந்த ஃபிக்கி என்பது குறிப்பிடத்தக்கது.
"இந்தியாவில் ஊழல் ஒழிய வேண்டும். அதற்கு அன்னா ஹஸாரோ, பாபா ராம்தேவ் போன்றவர்கள் எந்த விதமான முயற்சிகளை மேற்கொண்டாலும் சந்தோஷமாக ஆதரிக்கிறோம். ஊழல் எனும் நோயை இந்தியத் தொழில் துறையிலிருந்து அகற்ற வேண்டும்", என்றார் பஜாகஜ் குழுமத்தின் தலைவர் ராகுல் தேவ் பஜாஜ்.
கேத்ரெட் குழுமத் தலைவர் அடி கோத்ரெஜ் கூறுகையில், "இந்தியத் தொழில் துறை எதிர்காலத்தில் தெருவுக்கு வராமல் இருக்க வேண்டுமானால், நாம் இப்போது ஹஸாரேவின் போராட்டத்தை தீவிரமாக, பகிரங்கமாக ஆதரிக்க வேண்டும். அனைத்து நிறுவனங்களும் இதில் கரம் கோர்க்க வேண்டும். ஊழல் இல்லாத தொழில் துறை இருந்தால், இந்திய இன்னும் சில ஆண்டுகளுக்குள் வல்லரசாக தலை நிமிர்ந்து நிற்கும்," என்றார்.
ஃபிக்கி இயக்குநர் ராஜீவ் குமார் கூறுகையில், "இந்திய தொழில் துறை ஹஸாரேயின் போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறது" என்றார்.