லோக்பால் கமிட்டி: கர்நாடக லோக்ஆயுக்தா நீதிபதி விலக முடிவு
பெங்களூர்: லோக்பால் மசோதா உருவாக்குவதற்காக அன்னா ஹசாரே தலைமையில் மத்திய அரசு அமைத்துள்ள கமிட்டியில் இருந்து விலக கர்நாடக லோக்ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே முடிவு செய்துள்ளார்.
இந்தக் கமிட்டியில் இடம்பெற்றுள்ள வழக்கறிஞர் சாந்தி பூஷணுக்கு எதிராக ஏராளமான புகார்ரள் எழுந்துள்ள நிலையில் அவர் பதவி விலக மறுத்து வருகிறார்.
இந்நிலையில் இந்தக் கமிட்டியில் இடம்பெற்றுள்ள ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியும், கர்நாடக லோக் ஆயுக்தா தலைவருமான சந்தோஷ் ஹெக்டே, கூட்டு கமிட்டியில் இருந்து விலகப் போவதாக எச்சரித்துள்ளார்.
கர்நாடகாவிலேயே சந்தோஷ் ஹெக்டேவால் ஊழலை ஒழிக்க முடியாத நிலையில் அவர் லோக் பால் கமிட்டியில் இடம் பெற்று என்ன செய்துவிடப் போகிறார் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் கேள்வி எழுப்பியதையடுத்து சந்தோஷ் ஹெக்டே இந்த முடிவுக்கு வந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், லோக்பால் மசோதா கமிட்டியில் இடம்பெற்றுள்ள சமூக பிரதிநிதிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக, தினந்தோறும் நடந்து வரும் அவதூறு பிரசாரத்தால் அதிருப்தி அடைந்துள்ளேன். குறிப்பாக, திக்விஜய் சிங்கின் விமர்சனத்தால் வேதனை அடைந்துள்ளேன்.
நான் அரசியல்வாதி அல்ல. என்னால் இந்த வகையான போரில் ஈடுபட முடியாது. ஆகவே, கூட்டு கமிட்டியில் இருந்து விலகுவது பற்றி யோசித்து வருகிறேன். அன்னா ஹசாரே உள்ளிட்ட தோழர்களுடன் நாளை டெல்லியில் சந்தித்துப் பேசிய பிறகு, இதுபற்றி முடிவு செய்வேன் என்றார்.