நெல்லை ரயில் நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ரெய்டு: 4 பேர் சிக்கினர்
நெல்லை: நெல்லை ரயில் நிலையத்தில் சென்னையில் இருந்து வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 4 பேர் சிக்கினர்.
தென்னக ரயில்வே மூலம் இயக்கப்படும் அனைத்து ரயில்களிலும் கோடை கால விடுமுறையை முன்னிட்டு வருகிற ஜூன் மாதம் 20-ம் தேதி வரை அனைத்து இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. முன்பதிவுகள் அனைத்தும் தற்போது வெயிட்டிங் லிஸ்டில் தான் செல்கிறது. மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ரயில் அறிமுகப்படுத்தினாலும் மறுநாளே அனைத்து டிக்கெட்டுகளும் காலியாகி விடுகின்றன. இதனால் ஏராளமான பொதுமக்கள் ரயில் நிலைய அதிகாரியிடம் புகார் தெரிவித்தனர்.
ரயில் நிலைய ஊழியர்களும், சில புரோக்கர்களும் சேர்ந்து அனைத்து டிக்கெட்டுகளையும் கூடுதல் விலைக்கு விற்க முன்பதிவு செய்து விடுவதாகவும், புரோக்கர்களிடம் கூடுதல் பணம் கொடுத்தால் அவரவர் வயதுக்கு ஏற்ப வேறு பெயர்களில் டிக்கெட் வழங்கப்படுவதாகவும் புகார் கூறப்பட்டன. இதை தடுக்க தமிழகம் முழுவதும் ரயில்வே போலீசார் சோதனை நடத்த முடிவு செய்தனர். சென்னையில் இருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை நெல்லை வந்தனர். அவர்கள் பயணிகள் போல் நெல்லை முன்பதிவு கவுண்டர்கள் முன் நின்று சிறிது நேரம் கண்காணித்தனர்.
நெல்லை சந்திப்பு மேற்கு வாசல் கவுண்டர், மெயின் கவுண்டர், பாளை வார்டு அலுவலகத்தில் உள்ள ரிசர்வேஷசன் கவுண்டர் முன் ரகசியமாக கண்காணித்தனர். திடீர் என்று அவர்கள் ரயில்வே டிக்கெட் கவுண்டரில் கூடுதல் பணம் உள்ளதா என அதிரடி சோதனை நடத்தினர். மேலும் அனைத்து கவுண்டர்கள் முன்பும் வரிசையில் நின்ற ஒருவரையும் விடாமல் அதிரடி சோதனை நடத்தினர். உறவினர்களுக்கு டிக்கெட் எடுக்க வந்தவர்களிடம் அவர்களின் போன் எண் கேட்டு உண்மையா என்று விசாரித்தனர். டிக்கெட் எடுக்க வந்த உள்ளூர் போலீசார் உள்பட சில அரசு அதிகாரிகளையும் சோதனை செய்தனர். சோதனையில் கூடுதலான பணம் எதுவும் சிக்கவில்லை.
நெல்லை சந்திப்பில் நடந்த சோதனையில் மட்டும் சந்தேகப்படும் படியாக டிக்கெட் எடுத்த 20 பேரை தனியாக அழைத்துச் சென்று சரமாரியாக கேள்வி கேட்டு திணறடித்தனர். இதில் புரோக்கர்கள் இல்லை என்று தெரிந்த 16 பேர் விடுவிக்கப்பட்டனர். 4 பேர் புரோக்கர்களாக இருப்பர் என்று சந்தேகப்பட்டதால் முன்பதிவு விண்ணப்பத்தில் உள்ள கையெழுத்தை சோதனை செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.