தமிழகத்தில் பி பார்மஸி கல்வித் தகுதி தளர்ப்பு: டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம்
கடையநல்லூர்: தமிழகத்தில் பி பார்மஸி படிப்பிற்கான குறைந்த பட்ச கல்வித் தகுதியை தளர்த்தி டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பிளஸ் டூவில் 35 சதவீதம் பெற்ற எஸ்சி, எஸ்டி மாணவர்களும், 40 சதவீதம் பெற்ற இதர பிரிவு மாணவர்களும் பி பார்மஸி படிப்பில் சேரலாம்.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவு பொறியியல் கல்லூரிகளும், பாலிடெக்னிக் கல்லூரிகளும் செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் 1 லட்சத்திற்கும் அதிகமான பிஇ படித்தவர்களும் அதே அளவு டிப்ளமோ படித்தவர்களும் பல்வேறு நிறுவனங்களில் பணி அமர்த்தப்படுகின்றனர். பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குவதை போல பார்மஸி கல்வியிலும் தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள பார்மஸி கல்லூரிகளில் பிற மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி சவுதி அரேபியா, சூடான், ஏமன், ஈராக் போன்ற நாடுகளில் இருந்தும் வந்து படிக்கின்றனர்.
தமிழகத்தில் சுமார் 40 பார்மஸி கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் பி பார்மஸி படிப்பிற்கான குறைந்த பட்ச கல்வித் தகுதியை டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் குறைத்துள்ளது. இதற்கு முன்பு பி பார்ம் படிப்பில் சேர வேதியியல், இயற்பியல், உயிரியல் அல்லது தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களில் பிற வகுப்பினர் 50 சதவீதமும், எஸ்சி, எஸ்டி மாணவர்கள் 40 சதவீதமும் பெற்றிருக்க வேண்டும். ஆனால் இந்த கல்வியாண்டு முதல் பி பார்மஸி படிப்பில் சேர எஸ்சி, எஸ்டி மாணவர்கள் 35 சதவீதமும், பிற வகுப்பினர் 40 சதவீதமும் பெற்றிருந்தால் போதும் என தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அதுபோல பி பார்மஸி படிப்பில் நேரடியாக 2-ம் ஆண்டு சேர விரும்பும் டி பார்மஸி படித்த பிற வகுப்பினர் 40 சதவீதமும், எஸ்சி, எஸ்டி மாணவர்கள் 35 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும் என எம்ஜிஆர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பி பார்மஸி படித்தவர்களுக்கு இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்பு அதிகரித்து வருவதால் இந்த ஆண்டும் பி பார்மஸி படிப்பில் சேர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.