கட்சி ஆரம்பித்த இரண்டே மாதங்களில் முதல்வராகும் ரங்கசாமி!!
யாரெல்லாம் தனித்து நின்று தங்கள் செல்வாக்கை நிரூபிக்கும் அளவு தலைவர்களாக உள்ளார்களோ அவர்களை கட்சியை விட்டே வெளியேற்றுவதுதான் காங்கிரஸ் பாணி.
இதற்கு பல உதாரணங்களை முந்தைய வருடங்களில் பார்த்திருக்கலாம். கண்முன்னே இரண்டு உதாரணங்கள், புதுச்சேரியின் என் ரங்கசாமியும் ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டியும்.
உள்கட்சி மோதல்களில் மேலிடத்தால் பலி கொடுக்கப்பட்டவர் ரங்கசாமி. காங்கிரஸை விட்டு வெளியேறிய சில நாட்களிலேயே என் ஆர் காங்கிரஸை ஆரம்பித்தார். அதிமுகவுடன் கூட்டணி அமைத்தார். இந்தக் கூட்டணி வென்றால் புதுவை முதல்வர் ரங்கசாமிதான் என்று ஜெயலலிதா அறிவித்தார்.
ஆரம்பத்தில் இந்த கூட்டணியில் எக்கச்சக்க குழப்பங்கள். ஆனாலும் பின்னர் ஜரூராக வேலைகள் நடந்தன.
இதோ, கைமேல் பலன். என் ஆர் காங்கிரஸ் கூட்டணி 20 இடங்களைப் பிடித்துவிட்டது.
ரங்கசாமி மற்றும் அதிமுக கூட்டணிக்கு 20 இடங்கள் கிடைத்துள்ளன. இதில் என்.ஆர். காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், அதிமுக 5 இடங்களிலும் வென்றுள்ளன.
காங்கிரஸ்-திமுக கூட்டணி 9 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. இதில் காங்கிரஸ் 7 இடங்களிலும், திமுக 2 இடங்களிலும் வென்றுள்ளன.
நிரவி தொகுதியில், சுயேச்சை வேட்பாளர் சிவக்குமார் வெற்றி பெற்றுள்ளார்.
இதன்மூலம் ரங்கசாமி மீண்டும் புதுவையின் முதல்வராகிறார். இவருக்கு பக்கபலமாக இருந்தவர் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ப.சண்முகம்.
கட்சி ஆரம்பித்து இரண்டே மாதங்களில் முதல்வர் பதவியைப் பிடித்தவர் என்ற பெருமை இதன் மூலம் ரங்கசாமிக்கு கிடைத்துள்ளது. பல ஆண்டுகளாக கைவசம் இருந்த கோட்டையான புதுவையை கோட்டை விட்டுள்ளது காங்கிரஸ்.
புதுச்சேரி-வெற்றி பெற்றவர்களில் சிலர்:
கதிர்காமம் - என். ரங்கசாமி
இந்திரா நகர்- என்.ரங்கசாமி
மண்ணாடிப்பட்டு- என்ஆர் காங்கிரஸ் தலைவர் டிபிஆர் செல்வம்
திருபுவனை- என். ஆர். காங்.கின் பி.அங்காளன்
லாஸ்பேட்டை - என்.ஆர். காங்கிரஸின் எம். வைத்தியநாதன்
ஏம்பலம் - என்.ஆர். காங்.கின் பி. ராஜவேலு
உப்பளம்- அதிமுகவின் அன்பழகன்
நெல்லித்தோப்பு - அதிமுகவின் ஓம் சக்தி சேகர்
காமராஜர் நகர் - முதல்வர் வைத்திலிங்கம்
மங்கலம் -காங்கிரஸின் தேனி. சி. ஜெயக்குமார்
மாஹே- அமைச்சர் வல்சராஜ்
ஏனாம் - மல்லாடி கிருஷ்ணாராவ்
திருநள்ளாறு - காங்கிரஸின் ஆர். கமலக்கண்ணன்
முத்தியால்பேட்டை -திமுகவின் நந்தா டி. சரவணன்