கர்ப்பிணிக்கு ஆக்சிஜனுக்கு பதில் நைட்ரஸ் ஆக்சைடு: 8 பேருக்கு மெமோ
நாகர்கோவில்: அரசு மருத்துவமனையில் கருவை கலைக்க வந்த பெண்ணுக்கு ஆக்சிஜனுக்குப் பதில் தவறாக நைட்ரைஸ் ஆக்சைடு வாயுவை செலுத்தியதால் அந்தப் பெண் கோமாவில் உள்ளார். இது தொடர்பாக மருத்துவர் உள்பட 8 பேருக்கு மெமோ கொடுக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டம் ஈத்தாமொழி பகுதியைச் சேர்ந்தவர் ருக்மணி (27). அவர் கடந்த மார்ச் மாதம் 19-ம் தேதி நாகர்கோவில் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கருக்கலைப்பு மற்றும் குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சையின்போது அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவருக்கு ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்டது. முதல் சிலிண்டர் தீர்ந்தவுடன் மற்றொரு சிலிண்டரை பொருத்தியுள்ளனர்.
சிறிது நேரத்தில் அவரது உடல்நிலை மோசமானது. உடனே மருத்துர் ஒருவர் வந்து பார்த்துவிட்டு ஆக்சிஜன் சிலிண்டருக்கு பதில் நைட்ரஸ் ஆக்சைடு சிலிண்டரைப் பொருத்தியுள்ளது கண்டுபிடித்தார். அதை மாற்றிவிட்டு மீண்டும் ஆக்சிஜன் சிலிண்டரைப் பொருத்தினர். ஆனால் ருக்மணி கோமாவுக்கு சென்றார்.
அவருக்கு உயர் மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளித்தும் பலனில்லை. எனவே அவரை மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே மருத்துவ நிபுணர்கள் குழு நாகர்கோவிலுக்கு விரைந்தது. ஆக்சிஜன் சிலிண்டர் மாறியது தொடர்பாக மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை நடத்தியது. இது தொடர்பாக மயக்க மருந்தியல் குழுவிடம் விசாரிக்கப்பட்டது. இந்த விசாரணை அறிக்கை மருத்துவ இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மருந்தாளுனர்கள், மருத்துவர்கள் உள்பட 8 பேருக்கு மெமோ கொடுக்கப்பட்டுள்ளது.