அருணாச்சல், ஜம்மு-காஷ்மீர் இல்லாத மேப்பை வெளியிட்டு ஆஸ்திரேலியா விஷமம்
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அரசின் இணையதளம் ஒன்றில், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளான அருணாச்சல் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் இல்லாத மேப் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தியர்களுக்கு எதிரான இன ரீதியான வன்முறை உலகின் எந்தப் பகுதியையும் விட ஆஸ்திரேலியாவில்தான் அதிகம். இந்தியர்கள் என்றில்லாமல், பிற நாட்டவர் மீது எப்போதுமே துவேஷத்தை வெளிப்படுத்துவதை ஒரு கலாச்சாரமாகவே கொண்டுள்ளனர் ஆஸ்திரேலியர்கள்.
இந்த இனவெறி தாக்குதல்களை, போக்கை தடுக்க முடியாத ஆஸ்திரேலிய அரசு தற்போது இந்திய வரைபடத்தில் தனது விஷமப் போக்கைக் காட்டியுள்ளது.
ஆஸ்திரேலிய அரசின் இமிகிரேஷன் மற்றும் குடியுரிமை துறை வெளியிட்ட இந்திய வரைபடத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் மற்றும் அருணாச்சல் பிரதேச மாநிலம் ஆகிய இரண்டையும் காணவில்லை. அவை இல்லாமல் மொட்டையாக ஒரு மேப்பை வெளியிட்டுள்ளது அந்த துறை.
இதற்கு ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய சமுதாயத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலிய அரசுக்கும் இதுதொடர்பாக கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இதையடுத்து டெல்லியில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இந்த வரைபடம் தவறானது. அதை இணையதளத்திலிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று விளக்கியுள்ளது.