கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி நலனுக்காக காளஹஸ்தி கோவிலில் செல்வி சிறப்புப் பூஜை!

தனது கட்சியைச் சேர்ந்த எம்.பி. ஒருவர் நெற்றியில் குங்குமம் வைத்திருந்தார் என்பதால் கோபமடைந்த கருணாநிதி அதை அழிக்கச் செய்தார் ஒரு காலத்தில். ஆத்திகர்களை கடுமையாக சாடுவார். ஆனால் அவரது குடும்பத்தினர் கோவில் கோவிலாக வலம் வருவதையும், குங்குமம் வைத்துக் கொள்வதையும், பூஜைகள் புனஸ்காரங்களில் ஈடுபடுவதையும் தடுக்க மாட்டார், கண்டிக்க மாட்டோர், விமர்சிக்க மாட்டார்.
அதிலும் கடந்த திமுக ஆட்சிக்காலத்தின்போது அவரது குடும்பத்தினர் தமிழகத்தில் உள்ள முக்கியக் கோவில்களுக்கு அடிக்கடி சென்று பூஜைகள் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டனர். கருணாநிதியின் குல தெய்வம் கோவிலுக்குத்தான் அதிக அளவில் சென்றனர். இதைப் பற்றியெல்லாம் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தார் கருணாநிதி.
இந்த நிலையில் கருணாநிதி நலமாக இருக்க வேண்டும் என்று வேண்டி அவரது மூத்த மகள் செல்வி காளஹஸ்தி கோவிலுக்குப் போய் ராகு கேது சர்ப்ப தோஷ பூஜையை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்போது தனது சகோதரர் ஸ்டாலின், தங்கை கனிமொழி ஆகியோருக்காகாகவும் இந்த பரிகார பூஜையை நடத்தயுள்ளார் செல்வி.
சென்னையிலிருந்து குடும்பத்தினருடன் காரில் திருப்பதி சென்ற செல்வி அங்கு விஐபி வரிசையில் போய் ஏழுமலையானை வணங்கினார். பின்னர் காளஹஸ்தி கோவிலுக்குப் போனார். அங்கு ராகு கேது சர்ப்ப தோஷ பரிகார பூஜையை செய்தார். செல்வியுடன் அவரது குடும்பத்தினரும் இதில் கலந்து கொண்டனர்.
பின்னர் வாயுலிங்கேஸ்வரர், ஞான பிரசுனாம்பிகா தாயாருக்கு கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி பெயர்களில் சிறப்பு பூஜை செய்து பயபக்தியுடன் செல்வி உள்ளிட்டோர் சாமி கும்பிட்டனர். பிறகு வேத பண்டிதர்களை சந்தித்து சிறப்பு ஆசியும் பெற்று வெளியே வந்தனர்.












Click it and Unblock the Notifications