கேரள முதல்வரின் அறைக்குள் நுழைந்து அவரது இருக்கையில் அமர்ந்தவர் கைது
திருவனந்தபுரம்: கேரள மாநில தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வரின் அறையில் உள்ள அவரது இருக்கையில் அமர்ந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கேரள மாநிலத்தின் தலைமைச் செயலகம் திருவனந்தபுரத்தில் உள்ளது. அங்கு நேற்று கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் உள்ள அறையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் உம்மன்சாண்டி பங்கேற்க சென்றார். அப்போது, முதல்வரின் தனிஅறைக்குள் புகுந்த மர்மநபர் ஒருவர், முதல்வரின் இருக்கையில் அமர்ந்துள்ளார். 2 நிமிடங்களுக்கு மேலாக இருக்கையில் அமர்ந்த அந்த நபர் கையில் போனில் பேசி உள்ளார்.
அப்போது முதல்வரை சந்திக்க வந்த மாநில கலால் வரித்துறை அமைச்சர் பாபு, பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஏ.பி.அனில்குமார் ஆகியோர் மர்மநபர் அமர்ந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
முதல்வர் அறைக்கு விரைந்த போலீசார், மர்மநபரை பிடித்து விசாரித்த போது, அவர் தலைமைச் செயலம் அருகே உள்ள வி்ல்லபின்சலா பகுதியை சேர்ந்த சாலேஜோஸ்(40) என்பது தெரிந்தது.
இதுகுறித்து முதல்வர் உம்மன் சாண்டி கூறுகையில், இந்த சம்பவத்திற்காக பாதுகாப்பு அதிகாரிகளை குற்றப்படுத்த முடியாது. அதிகளவிலான பார்வையார்கள் வருவது குறித்து, பாதுகாப்பு அதிகாரிகள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், மக்களை சந்திப்பதில் இடையூறு ஏற்படக் கூடாது என்பதற்காகவே பாதுகாப்பை தளர்த்த கூறினேன், என்றார்.
போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், முதல்வர் அறைக்குள் நுழைந்தவர், பார்வையாளர்கள் என்ற பெயரில் நுழைந்தவர்களில் ஒருவராக இருக்கலாம் எனக் கருதுகிறேன், என்றார்.
கைது செய்யப்பட்ட அந்த நபருக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருந்தா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.