மத்திய அரசு உதவவில்லை- சொந்த நிதியிலிருந்துதான் திட்டங்களுக்கு செலவிடுகிறோம்: ஜெயலலிதா
சென்னை: மத்திய அரசு தமிழகத்திற்கு எந்த நிதியையும் வழங்கவில்லை. தமிழக அரசு தனது சொந்த நிதியாதாரங்களிலிருந்துதான் திட்டங்களுக்கு செலவிடுகிறது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தின்போது சிபிஎம் உறுப்பினர் டில்லிபாபு பேசுகையில், அவருக்கும் முதல்வருக்கும் விறுவிறுப்பான விவாதம் நடந்தது.
விலைவாசியை குறைக்க ஆன்லைன் வர்த்தகத்தை முழுமையாக தடை செய்ய மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். கடந்த ஆட்சியில் வீட்டுமனை பட்டா வழங்குவதில்லை என்றே அரசாணை வெளியிடப்பட்டது. எனவே அதனை ரத்து செய்து, வீட்டுமனை பட்டா கோரியுள்ள அனைவருக்கும் தகுதி அடிப்படையில் பட்டா வழங்க வேண்டும்.
முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட வரிகளை தவிர்த்திருக்கலாம், என்றாலும் இந்த பட்ஜெட்டை நாங்கள் வரவேற்கிறோம். அரூர் தொகுதியில் பள்ளிக்கூடங்கள் இல்லாத பகுதிகள் பல உள்ளன. அங்கு தொடக்கப் பள்ளிக்கூடங்கள் தொடங்க வேண்டும். கால்வாய் நீட்டிப்பு செய்ய வேண்டும் என்றார்.
அப்போது முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டு, உறுப்பினர், பள்ளிகள் கட்ட வேண்டும், கால்வாய் நீட்டிப்பு வேண்டும், இன்னும் பல பணிகளை செய்ய வேண்டும் என்று கூறினார். முன்கூட்டி போட்ட வரிகளை தவிர்த்திருக்கலாம் என்றும் கூறுகிறார். அப்படியிருந்தால் இந்த பணிகளை செய்வதற்கு அரசுக்கு பணம் எங்கிருந்து வரும் என்று கேட்டார்.
பின்னர் டில்லி பாபு மீண்டும் பேசுகையில், தேர்தல் பிரசாரத்தில் கொடுத்த வாக்குறுதி தான் கால்வாய் நீட்டிப்பு, அதனைத்தான் செய்துதரும்படி கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
அதற்குப் பதிலளித்த முதல்வர், வாக்குறுதியை நிறைவேற்ற மாட்டோம் என்று சொல்லவில்லை. அதற்கு பணம் வேண்டும், அது எங்கிருந்து வரும்? என்று மீண்டும் கேட்டார்.
அப்போது குறுக்கிட்ட சிபிஎம் தலைவர் பாலபாரதி கூறுகையில், உங்களுடன் நாங்களும் இணைந்து மத்திய அரசிடம் கேட்போம், கேட்டு பெறுவோம். முதல்வர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஆதரவு தருவோம் என்றார்.
இந்த சமயத்தில் எழுந்த காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி, மத்திய அரசு தமிழக அரசு கேட்டதை விட கூடுதலாக ரூ.23 ஆயிரம் கோடி வழங்கியுள்ளது என்றார்.
இதைகக் கேட்டதும் வேகமாக எழுந்த முதல்வர் ஜெயலலிதா, உறுப்பினர் தான் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசுகிறார். மத்திய அரசிடம் பலமுறை கேட்டாகிவிட்டது. நாங்கள் கேட்ட எந்த சிறப்பு உதவியையும் மத்திய அரசு தரவில்லை. எங்கள் கோரிகையை மத்திய அரசு நிறைவேற்றவில்லை.
காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி, மத்திய அரசு தமிழக அரசின் திட்டச்செலவுக்காக 23,535 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளதை குறிப்பிடும் வகையில் ஒரு கருத்தை தெரிவித்தார். கேட்டதை விட அதிகமாக கிடைத்தது என்றார். அப்போது எனது அரசால் கோரப்பட்ட நிதி உதவிகளை மத்திய அரசு இன்னமும் செய்யவில்லை என்று நான் குறிப்பிட்டேன்.
எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்பு, மீனவர் நலன், நதிநீர் இணைப்பு, சூரிய ஒளி மின்சார உற்பத்தி, மடிக்கணினி வழங்கும் திட்டம் போன்ற திட்டங்களுக்கு 2,52,000 கோடி ரூபாய் அளவிற்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரி இருந்தேன். இதுவரை எந்த நிதி உதவியும் மத்திய அரசிடமிருந்து வரவில்லை. இதைத்தான் நான் குறிப்பிட்டேன்.
பிரதமரை நான் சந்தித்து இந்த கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனுவினை அளித்தேன். அதற்கு இதுவரை எந்த நிதி உதவியும் கிடைக்கவில்லை.
விஜயதாரணி தமிழ்நாடு அரசு அனுமதி பெற்றுள்ள திட்ட நிதியை பற்றி குறிப்பிடும் வகையில் பேசினார். 2011-12-ம் ஆண்டிற்கான திட்ட மதிப்பீடு 23,535 கோடி என, நான் சமீபத்தில் புதுடில்லி சென்று மத்திய திட்டக்குழுவின் துணைத்தலைவர் மான்டெக் சிங் அலுவாலியாவுடன் நடைபெற்ற கூட்டத்தில், நடைபெற்ற கலந்துரையாடலின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது.
இந்த 23,535 கோடி ரூபாயில் மத்திய அரசு வழங்கியுள்ள மொத்த நிதி உதவி 2,829 கோடியே 50 லட்சம் ரூபாய் மட்டுமே. இந்த நிதி உதவி இயல்பாக வழங்கப்படும் மத்திய உதவியாக 588 கோடியே 4 லட்சம் ரூபாயும், வெளிநாட்டு உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான மத்திய உதவியாக 43 கோடியே 15 லட்சம் ரூபாயும், பிற திட்டங்களுக்காக மத்திய உதவியாக 2,198 கோடியே 50 லட்சம் ரூபாய் மட்டுமே மத்திய அரசின் நிதி உதவியாகும்.
இதுபோக, திட்டப்பணி இலக்காக செலவிடப்படும் நிகரத்தொகை 20,705 கோடியே 50 லட்சம் ரூபாய் மாநில அரசின் நிதி ஆதாரத்தில் இருந்து தான் செலவழிக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆக, 2011-12-ம் ஆண்டிற்கான ஒட்டுமொத்த ஆண்டு திட்ட ஒதுக்கீட்டில், 23,535 கோடி ரூபாயில் 20,705.50 கோடி ரூபாய் மாநிலத்தின் சொந்த நிதி ஆகும். இதில் 2,829.50 கோடி ரூபாய் மட்டும் தான் மத்திய அரசு தருகிறது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்றார் முதல்வர்.