ஒரே நாளில் சென்னையில் 16 செ.மீ., மழை கொட்டியது-இன்றும் மழை பெய்யும் என எச்சரிப்பு
சென்னை: சென்னையில் நேற்றுமுன்தினம் மட்டும் 16 செ.மீ மழைக் கொட்டித் தீர்த்தது. மழைநீர் ஆங்காங்கே தேங்கி நின்றதால், சென்னை மக்கள் செய்வதறியது திண்டாடினர்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை நடந்துவரும் நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்றுமுன்தினம் மாலை துவங்கிய மழை இரவு முழுவதும் நீடித்தது. வங்க கடலில் ஏற்பட்ட வெப்பச் சலனம் காரணமாக பெய்த இந்த திடீர் மழையால், ஆங்காங்கே மழைநீர் தேங்கி, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதிகபட்சமாக, மீனம்பாக்கத்தில் 16.3 செ.மீட்டரும், டி.ஜி.பி அலுவலம் அருகே 16 செ.மீ., நுங்கபாக்கத்தில் 15 செ.மீ., மழையும் பெய்தது. சென்னை மாநகராட்சி அலுவலகம், சென்ட்ரல் ரயில் நிலையம், அயனாவரம், கொளத்தூர், பெரம்பூர், ஓட்டேரி, திருவான்மியூர், அடையாறு, கோயம்பேடு 100 அடி சாலை, அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் அதிகளவில் தேங்கியதால், மக்கள் நடமாட முடியாமல் திணறினர்.
இருசக்கர வாகனங்கள் முதல் பஸ்கள் வரை அனைத்து வாகனங்களும் ஊர்ந்து சென்றதால், அதிகளவிலான காலதாமதம் ஏற்பட்டது. மழைநீர் தேங்கிய இடங்களுக்கு விரைந்த மாநகராட்சி பணியாளர்கள் தேங்கி கிடந்த நீரை மோட்டர்களின் உதவியுடன் அப்புறப்படுத்தினர். இதனால், சற்று சகஜநிலை திரும்பியது.
இன்றும் மழைப் பெய்யும்:
தென்மேற்கு பருவ மழை ஆந்திராவில் வலுவடைந்துள்ளதால், அடுத்த 24 மணிநேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே லேசானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில், மாலையிலோ அல்லது இரவிலோ மழைப் பெய்யலாம் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications