மும்பையைத் தொடர்ந்து டெல்லியில் குண்டுவெடிப்பு- ப.சிதம்பரத்திற்கு 2வது அதிர்ச்சி
டெல்லி: உள்துறை அமைச்சர் பொறுப்புக்கு வந்த பின்னர் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டு காலம் இந்தியாவில் எங்குமே குண்டுவெடிக்காத நிலையை உருவாக்கி வைத்திருந்த உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு டெல்லி சம்பவம் 2வது அதிர்ச்சிச் சம்பவமாக அமைந்துள்ளது.
உள்துறை அமைச்சர் பொறுப்புக்கு ப.சிதம்பரம் வந்த பின்னர் நாடு முழுவதும் உளவு மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்தினார். உளவுத் தகவல் பரிமாற்றத்தை சரி செய்தார். பாதுகாப்பு ஏற்பாடுகளை விரிவுபடுத்தினார். கெடுபிடியுடன் கூடிய இந்த ஏற்பாடுகளால் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் வெகுவாக குறைந்தன, அடியோடு நின்றும் போயின.
ஆனால் ஜூலை 14ம் தேதியன்று மும்பையில் மூன்று இடங்களில் பலத்த குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடந்து அனைவரையும் அதிர வைத்தது. இந்த சம்பவத்தில் 21 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் ப.சிதம்பரத்திற்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அவர் உள்துறை அமைச்சரான பின்னர் நடந்த மிகப் பெரிய தீவிரவாதத் தாக்குதல் இதுதான்.
இந்த நிலையில் இன்று டெல்லியில், உயர்நீதிமன்ற வாசலிலேயே நடந்துள்ள குண்டுவெடிப்புச் சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. மிக முக்கிய இடங்களில் ஒன்று உயர்நீதிமன்றம். அங்கு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு இன்று வெடித்துச் சிதறியுள்ளது, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.












Click it and Unblock the Notifications