நில அபகரிப்பு: வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த முன்னாள் பாமக எம்.எல்.ஏ. கைது
கரூர் அருகே பரமத்தி வேலூரில் 1950ம் வருடம் சாமியப்ப செட்டியார் என்பவர் 17 உறுப்பினர்களைக் கொண்ட காந்திஜி நினைவு மன்றம் என்ற அமைப்பை தொடங்கினார். இந்த மன்றத்திற்கு 1.73 ஏக்கர் நிலத்தை வாங்கி டிரஸ்ட் தொடங்கினார். இந்த இடம் காந்தி பெயரில் உள்ளது. டிரஸ்ட் உறுப்பினர்கள் 17 பேரும் 1976ம் வருடத்திற்குள்ளாகவே இறந்துவிட்டனர்.
அதன் பின்னர் இந்த நிலம் பராமரிப்பின்றி கிடந்தது. இந் நிலையில் 2006ம் ஆண்டு கபிலர்மலை சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவான டாக்டர் நெடுஞ்செழியனும் பேரூராட்சி மன்ற தலைவராக இருந்த பொன்னிமணி, வழக்கறிஞர் காமராஜர் ஆகியோர் போலி பத்திரங்கள் தயார் செய்து இந்த நிலத்தை தங்கள் பெயருக்கு எழுதிக் கொண்டதாகத் தெரிகிறது.
இந் நிலையில் இந்த இடத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்திற்கு மின் இணைப்பு வாங்குவதற்காக, இந்த இடம் தனக்கு சொந்தமானது என்று நெடுஞ்செழியன் ஆவணங்களையும் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக நெடுஞ்செழியன் மீது பொத்தனூர் மக்கள் குடிமை இயத்தை சேர்ந்த மதியழகன் என்பவர் போலீசில் புகார் கொடுத்தார். இது குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார் இன்று அதிகாலை 3 மணிக்கு நெடுஞ்செழியன் வீட்டுக்கு சென்றனர்.
அங்கு அசந்து தூங்கிக் கொண்டிருந்த அவரை போலீசார் கைது செய்தனர். இதே வழக்கில் டவுன் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் பொன்னிமணி, வழக்கறிஞர் காமராஜ் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுஞ்செழியன் மேட்டுப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தார். அன்மையில் தான் நெடுஞ்செழியன் பாமகவில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட மூவரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.