தூத்துக்குடியில் வேட்டி, சேலை வினியோகித்த வேட்பாளர் கைது
திருச்செந்தூர்: தூத்துக்குடியில் வாக்காளர்களுக்கு வேட்டி, சேலை வினியோகித்த வேட்பாளர் கைது செய்யப்பட்டார். இதே போல் சாத்தான்குளம் அருகே வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த குத்துவிளக்கு, பைபிள் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் வீரமாணிக்கம் பஞ்சாயத்து 2வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர் நந்தகோபால். அவர் வாக்காளர்களுக்கு வேட்டி, சேலை வினியோகம் செய்து வாக்கு சேகரித்து வருவதாக திருச்செந்தூர் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து பறக்கும் படை துணை, தாசில்தார் ரகு, வருவாய் அலுவலர் கோபால், சப்-இன்ஸ்பெக்டர் கணேசன், ஏட்டு பாண்டி ஆகியோர் வீரமாணிக்கபுரத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி பிடித்து சோதனை நடத்திய போது அதில் 51 சேலைகள், 11 வேட்டிகள், 8 பாலிஸ்டர் வேட்டிகள், 23 பேண்ட் சார்ட், 7 காட்டன் வேட்டிகள், 12 சட்டைத் துணிகள் இருந்தன. அதிகாரிகள் அவற்றை காருடன் பறிமுதல் செய்தனர். விசாரணையில் வேட்பாளர் நந்தகோபால் வாக்காளர்களுக்கு வேட்டி, சேலை வினியோகம் செய்ததும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
இதே போன்று சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு 4 பெண்கள் போட்டியிடுகின்றனர். இதில் முன்னாள் லயன் சங்க தலைவர் சுந்தர் மனைவி பெர்சி என்பவரும் போட்டியிடுகிறார். இவர் தரப்பில் வாக்காளர்களுக்கு குத்து விளக்கு, பைபிள் கொடுப்பதாக தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படை, மண்டல துணை தாசில்தார் சூரியநாராயணன், தட்டார்மடம் சப்-இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் மற்றும் போலீசார் முதலூரில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது வேட்பாளர் பெர்சியின் சார்பில் அதே ஊரைச் சேர்ந்த கணேசன் என்பவர் வாக்காளர்களுக்கு குத்து விளக்கு, பைபிள் வினியோகித்து கொண்டிருந்ததை பார்த்தனர்.
இதை தொடர்ந்து அதிகாரிகள் அவரிடமிருந்து 10 குத்துவிளக்குகள், 21 பைபிள்கள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.